கலைஞர்களின் கூத்து
கலைஞர்கள், நாம் அறிந்தேயிராத, வேறு வேறான, புதிர்கள் நிறைந்த உலகில் வாழ்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தஉலகங்கள் ஆச்சர்யமான பாவனைகளும், வினோத புருசர்களும் நிரம்பியுள்ளதாகக் கதைகள் சொல்லியிருக்கிறார்கள். நிலவைப் போலவோ, ஒருகதிரவனைப் போவோ, அல்லது பல்வேறு நட்சத்திரங்களைப் போலவோ தினசரி பார்க்க முடியாத அவர்களின் உலகங்கள், சில அபூர்வ தருணங்களில் மட்டும்,அதிகாலையில் ஞாபகமிருக்கும் கனவின் சிறுதுளி போல யாருடைய கண்களுக்கேனும் தட்டுப்படக்கூடுமென்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

கலைஞர்களின் உலகங்களுக்குள் பயணம் செய்வதற்கு ஏற்கனவே சொல்லி வைக்கப்பட்ட தெளிவான விதிமுறைகள் இல்லை. எனவே, இதற்கு முன்பயணம் போனவர்களின் வழித்தடங்களும் இல்லையென்றே சொல்கிறார்கள். கலைஞர்களாக மாறுவதற்கும், அவர்களது உலகைக் காண்பதற்கும்பிறப்பே காரணமென்று ரொம்ப காலமாய்ச் சொல்லி வந்ததை நல்லவேளை இன்று யாரும் மதிக்கவில்லை. கலைஞர்களின் உலகம் சூட்சுமமாகத்தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் பொழுது, இதுதான் அது என்று கண்டுணரும் குணம் தெய்வீகத் தன்மையுடன் தொடர்புடையது என்பது தீவிரமாகமறுக்கப்பட்டிருக்கிறது. எனவே, அது யாருக்கு, எப்பொழுது, எந்த கணம் தன்னையே வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதில் பல்வேறு குழப்பங்கள்உள்ளன.

ஒருமுறை, அது ஒரு பெரிய கருத்தரங்கம். மக்கள் கலைகளைப் பற்றிய விவாதம் நடைபெற்று வந்தது. அதன் ஒரு பகுதியாக பரமசிவராவ் வந்திருந்தார்.அவரோடு அவரது பாவைகளும்.

பரமசிவராவ், மிக முக்கியமான கிராமியக் கலைஞர். அதி முக்கியமானவர். ஏனென்றால், அழிந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டார் கலையின் கடைசிக்கலைஞர். தனது பாவைகளை விற்கும் அவலத்தை இன்றளவும் தவிர்த்து வரும் தோற்பாவைக் கூத்துக் கலைஞர்.

தோற்பாவைக் கூத்து என்ற நாட்டார் கலையைத் தென் தமிழகத்து வாசகர்கள் அறிந்திருப்பார்கள். சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு வரையில், அதாவது1990களின் துவக்கம் வரையில் இக்கலைஞர்கள், ஒற்றை மாட்டு வண்டியைக் கட்டிக் கொண்டு, குடும்பமாகக் கிளம்பி, கிராமம் கிராமமாகவந்து கூத்து நிகழ்த்தி வந்தார்கள். அவர்கள் நிகழ்த்தும் இராமாயணக்கூத்து மிகப் பிரபலம். (அவர்களைப் பற்றியும், கூத்து பற்றியும் மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் அ.கா. பெருமாள் எழுதிய புத்தகங்களைப் பாருங்கள்).

நான் சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். இக்கலைஞர்களிடம் கூத்து நடத்துவதற்கான பாவைகள் உண்டு. வளமையானக் காலங்களில் நூறு, இருநூறுபாவைகள் வைத்திருந்த கலைஞர்கள் கூட உண்டு. இந்தப் பாவைகள் ஆட்டுத் தோலால் செய்யப்பட்ட தட்டையான பாவைகள். ஆட்டுத் தோலில்கதாபாத்திரங்கள் வரையப்பட்டு உருவான தோல் பொம்மைகள். கதாபாத்திரங்கள், வண்ணங்கள் கொண்டு வரையப்பட்டவை. மேனியெங்கும்யோனிகளாய் நிரம்ப சாபம் பெற்ற இந்திரனைப் போல் இவற்றின் தேகமெங்கும் ஒளி புகுந்து சுடருவதற்கான ஆயிரம் துளைகள்.

தோற்பாவை நிழற்கூத்தின் சூட்சுமம் இதுதான்: துளைகள் நிரம்பிய, வண்ண வண்ண தோற்பாவைகளின் பின்புறமிருந்து ஒளியைப் பாய்ச்ச, பாவைகளின் வண்ணநிழல் திரையில் விழுந்து கூத்து களைகட்டுகிறது. கட்டப்பட்ட மெல்லிய வேட்டித் துணியில் பாவைகளின் வண்ண நிழல் புரள்கிறது.

அன்றைய தினம் பரமசிவராவ் தனது பாவைகளை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். அப்பொழுது அவரிடம் எழுபது, எண்பது பாவைகள் போலஇருந்தன. வழக்கமாய் திரைச்சீலை கட்டிய கூண்டுக்குள் பாவைகளோடு மட்டுமே பார்த்தும், பேசியும் நிகழ்ச்சி நடத்திய பரமசிவராவுக்கு அன்றுஎங்களோடு மாறுபட்ட ஒரு சூழல். பார்வையாளர்களான எங்களோடு நேருக்கு நேராய் உட்கார்ந்து பேச வேண்டிய முறையில் ஏற்பாடு. அவரது வலது,இடது புறங்களில் பாவைகள் ஒன்றன் மேலொன்றாய் அடுக்கப்பட்டுள்ளன.

அன்றைய தினம் அவர் கூத்து நிகழ்த்த வரவழைக்கப்படவில்லை. கருத்தரங்கொன்றில் பேசும்படி அழைக்கப்பட்டிருந்தார். அவரது வாழ்க்கை, குடும்பம்,கலை, பாவைகள், கூத்து என்று பல்வேறு செய்திகளை நேரடி உரையாடல் மூலமாக அவரிடமிருந்து தெரிந்து கொள்வது போன்ற ஏற்பாடு. அவர்அதற்குத் தயாராகவே இருந்தார். தனது கலை அழிந்து வருவது பற்றியும், அது காப்பாற்றப்பட வேண்டிய அக்கறை பற்றியும் அவர் கவலையுடன் பேசிக்கொண்டிருந்தார். அவரது மனவேதனை பங்கேற்பாளர்களான எங்களை ஒரு குழந்தையைப் போல தொற்றிக் கொண்டது. இறந்து கொண்டிருக்கும்கலையொன்றின் கட்டிலை சுற்றி நாங்கள் அனைவரும் கையாலற்று நிற்பது போல் உணர்ந்தோம். இறுக்கமான முகத்தோடு மரணம் நிகழ்வதைவேடிக்கை பார்க்கும் இந்த மனநிலையை எங்களில் பலர் அந்நிகழ்வு முடியும் வரையில்கூட தக்கவைத்துக் கொண்டிருந்தனர்.

இந்த சமயம், எங்களது கேள்விகளுக்கு பதில் சொல்லும் தோரணையில் அவர் தனது இருபுறங்களிலும் அடுக்கப்பட்டுள்ள தோற்பாவைகளைக்கையிலெடுத்து காட்டி பேசவேண்டி வந்தது. முதலிரு தருணங்களில் எளிதாக இருந்த இக்காரியம் நேரம் செல்லச் செல்ல குழப்பமும், சிக்கலும் நிறைந்ததாகமாறத்துவங்கியது. நேரம் ஆக, ஆக, பரமசிவராவ் எங்களுக்குக் காட்ட விரும்பிய பாவைகள் அவரது கைகளில் சிக்க மறுத்தன. எனவே,ஒவ்வொரு முறையும் அவர் தன்னோடு கொண்டு வந்த எழுபது, எண்பது பாவைகளையும் தேடிய பின்பே அவர் காட்ட விரும்புகிற அந்த ஒன்றைக்கண்டுபிடிக்க முடிந்தது.

இதற்கான காரணங்கள் இருந்தன. ஒவ்வொரு கதாபாத்திரம் தொடர்பாகவும் அவரிடம் பல்வேறு பாவைகள் இருந்தன. எடுத்துக்காட்டாக,சீதை என்றதும், திருமணத்திற்கு முந்தைய சீதை, மணக்கோல சீதை, வனவாச சீதை, அசோகவன சீதை, தாயான சீதை எறு பல்வேறு வகைகள்.இந்த வகைகளுக்குள் தான் தேடும் பாவையை அடைவதற்கு பரமசிவராவ் அதிகமாக சிரமப்பட வேண்டியிருந்தது.

பாவைகளைத் தாமதமாக எடுக்க நேர்வது குறித்து பரமசிவராவ் கொஞ்சம் கொஞ்சமாய் பதட்டமடைவதை எங்களால் உணர முடிந்தது. அவரது இயல்புகெட்டுக் கொண்டிருக்கிறது. அவரது உடலியக்கம் தாறுமாறாக மாறுகிறது. அவரது கைகள் பரபரவென பாவைகளுக்குள் அலைகின்றன.திக்குத் தெரியாத காட்டில் மதமேறிய யானை போலிருந்தன அவரது கைகள். கருத்தரங்க அறையில் அன்றைய தினம் நிலவிய அமைதி அவரை மேலும்மேலும் கிலியடையச் செய்திருக்க வேண்டும். இருட்டறை விலங்கைப் போல் அவர் வலமும் இடமுமாய் பாவைகளுக்குள் பாய்ந்து கொண்டிருக்கிறார்.இடப்புற பாவைகள் வலப்புறமும், வலப்புற பாவைகள் இடப்புறமுமாய் அவரோடு கூட சதிராடிக் கொண்டிருக்கின்றன. இதனிடையே தன் கையில் சேர்ந்தபாவைகள் சிலவற்றை சற்று தூரமாய் விழும்படி வீசவும் வீசினார். அவர் விரும்பிய பாவையின் ஸ்பரிசம் தேடி வெறியாய்த் திரிந்தன அவரது கைகள்.

தோற்பாவைகள் கிழிந்து விடும் என்று நாங்கள் பயந்தோம். அவர் எங்களுக்காக இவ்வளவு பதட்டம் அடையத் தேவையில்லை என்றுஎங்களுக்கே பட்டது. பதட்டத்தில், தனது பாவைகளைதானே சிதைத்துக் கொள்வாரோ என்ற பயம் எங்களுக்கு. அங்கும் இங்குமென அவர்பாவைகளை வீசுவதில் நாங்களும் பதட்டம் கொள்ளத் துவங்கினோம். அவரை இப்படியே தொடர விட்டால் பாவைகளைக் கிழித்து எறிந்த பின்பு தான்நிம்மதியாவார் போல் தோன்றியது. நாங்கள் அவரைக் குறுக்கிட்டோம்.

சமாதானப்படுத்தும் வகையில், பாவைகளைக் காட்ட வேண்டிய கட்டாயம் இல்லையே என்றோம். எங்களை ஏறிட்டு சிரித்தவர் (இயலாமையின்புன்னகை?) எங்கே போகும்? என்று சொல்லி மறுபடியும் தேடத் துவங்கினார்.

அவரது வேகத்தைப் பார்க்கையில், எங்களுக்காகத் தனது பாவைகளைக் கிழித்துவிடக்கூட அவர் தயாராகிவிட்டது போலிருந்தது. பாவைகளை விடவும்மனிதர்கள் மேலானவர்கள் என்பது ஏதாவதொரு கோட்பாட்டின்படி சரியே என்றாலும், அவரது அடுத்த நாள் வாழ்க்கைப்பாட்டிற்குமனிதர்களைவிடவும் அவர் பாவைகளையே நம்பியிருக்க வேண்டுமென்பது தான் யதார்த்தம். எங்களை முன்னிட்டு அவர் பாவைகளை இழந்துவிடுவதுபுத்திசாலித்தனமான காரியமில்லை. எனவே, வலுக்கட்டாயமாய் நாங்கள் அவரைத் தடுத்து நிறுத்தினோம்.

ஏறக்குறைய வன்முறையைப் பிரயோகித்து தான் அவரை அன்றைய தினம் நிறுத்த வேண்டியிருந்தது. இரண்டு பேர் அவரது இரண்டு புறமும் நின்று அவரைப்பிடித்துக் கொண்டார்கள். அவரது பரபரக்கும் கைகளை பாவைக் குவியலிலிருந்து அவர்கள் அப்புறப்படுத்தினார்கள். அவரால் தூக்கி விசிறப்பட்ட(ஏறக்குறைய அப்படித்தான்) பாவைகளை எடுத்து அடுக்கினார்கள். பின்பு நிதானப்படுத்தும் வகையில் அவருக்கு ஒரு குவளை தேநீர் தந்தார்கள்.பரமசிவராவ் எங்களைப் பார்த்து மறுபடியும் சிரித்தார்; பின்பு தேநீர் பருகினார்.

தான் தேடுகிற பாவை எங்கே ஒளிந்திருக்கும் என்ற பார்வையை அவர் இன்னமும் விட்டபாடில்லை. தேநீரை அவர் பருகிய வேகத்தைப் பார்த்தால்பழையபடி பதட்டமடையத் தயாராவது போலவே இருந்தது. நாங்கள் திரும்பவும் அவரிடம் பொறுமையாகச் சொன்னோம். நீங்கள் கூத்து பற்றியும்,உங்களது அனுபவம் பற்றியும் பேசினாலே போதுமானது. பாவைகளை இறுதியில் நிதானமாகப் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் தேடுவதைப் பார்த்தால்எங்கே பாவைகள் கிழிந்து போகுமோ என்று பதட்டமாக இருக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக எங்களது எந்த சமாதானமும் அவரிடம் செல்லுபடியாகவில்லை. அவர் மறுபடியும் பாவைகளுக்குள் புகுந்து வரவே விரும்பினார்.பாவையைத் தேடி எடுக்காத வரையில் அவர் அமைதியடையப் போவதில்லை என்று தெரிந்தது. பாவைகளை சேதப்படுத்துவதிலிருந்து அவரை எது தடுத்துநிறுத்தும்? நாட்டார் கலைகள் பற்றிய கருத்தரங்கொன்றில் பாவைகளைக் கிழித்து எறிவதைப் போன்ற அபத்தம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?எங்களின் மீதும், நாங்கள் ஏற்படுத்தும் நம்பிக்கைகள்மீதும் அவர் எவ்வளவு தூரம் மரியாதை வைத்திருந்தால் தனது பாவைகளைக்கூட உதாசினப்படுத்தும்மனநிலையை பெற்றுக் கொண்டிருப்பார்?

இறுதியில் நாங்கள் இப்படிச் சொல்ல வேண்டி வந்தது; பரமசிவராவ், நீங்கள் எங்களுக்கு பாவைகளைக் காட்டுங்கள். ஆனால், அவைகளைத்தேடும்போது நிதானமாகத் தேடுங்கள். உங்களது வேகமும், பதட்டமும், சமயங்களில் அவற்றை விசிறுவதும் பாவைகள் கிழிபடுவதற்கான வாய்ப்புகளைஏற்படுத்திவிட முடியும். உங்களால் இன்னும் கொஞ்சம் மெதுவாய் அப் பாவைகளைக் கையாள முடியாதா?

இதற்கு பரமசிவராவ் எங்களுக்குச் சொல்லிய பதிலே இங்கு முக்கியமானது. அதனை அசாதாரணமான ஒன்று என்றே நான் புரிந்து கொள்கிறேன்.ஆனால் நிறையபேர் அதைச் சாதாரணம் என்கிறார்கள். ஒருவேளை சாதாரணத்திற்கும் அசாதாரணத்திற்குமான இடைவெளியில் அந்தப் பதில் வந்துசேரக் கூடும். நிறைய பேருக்கு அவரது பதில் புரியவில்லை. அர்த்தம் புரிந்த சிலரோ பரமசிவராவ் என்ற கலைஞனின் உலகிற்குள் உன்மத்தம்பிடித்தவர்களாகத் திரிந்தார்கள். அவர் அன்றைய தினம் சொல்லிய மிக எளிமையான பதில் இதுதான்; பாவைகளை நிதானமாய், மெதுவாய் எப்படிக்கையாளுவது?

இந்தப் பதிலின் அசாதாரணம் உறைப்பதற்கு புரிந்து கொள்வதற்கு பாவைக்கூத்து குறித்த சில அடிப்படை தகவல்கள் தேவையாக இருக்கலாம்.பாவைக்கூத்து ஒரேயொரு கலைஞரை மட்டுமே மையப்படுத்தி அமைவது. பின்பாட்டு பாடுகிறவர்கள், இசைக்கலைஞர்கள் என நான்கு பேர் வரைஇருப்பார்கள் என்றாலும், அந்த முதன்மைக் கலைஞரே மொத்த நிகழ்வையும் தீர்மானிக்கிறவர். பரமசிவராவ் போன்ற இம்முதன்மைக்கலைஞர்கள் திரைச் சீலைக்குப் பின்பு, படுதாவினால் செய்யப்பட்ட கூண்டினுள் அமர்ந்திருப்பார்கள். அவரைப் பார்வையாளர்கள் சாதாரணமாய் பார்க்கமுடிவதில்லை. திரைச் சீலைக்கு பின்னனிருந்து அவர் தன்னந்தனியாளாய் பாவைகளுக்கு விசையாட்டிக் கொண்டிருப்பார். காட்சிகளின் தன்மைக்கேற்ப சிலசமயம் சொற்பமான பாவைகளையும், சில சமயம் எண்ணிக்கையில் அதிகமான பாவைகளையும் அவர் இயக்க வேண்டிவரும். அப்பொழுதெல்லாம்அக்கலைஞர் தனது கைகளைப் போலவே கால்களையும் பாவிக்க வேண்டியதிருக்கும்.

இதனிடையே கதையை அவரேதான் பாடலாக பாடவேண்டியுள்ளது; உரைநடையிலும் பேச வேண்டியுள்ளது; பாவைகளுக்கேற்ப விதவிதமானக் குரல்களில்பேசுவதையும் செய்ய வேண்டியுள்ளது. கூத்து துவங்கி முடியும் வரையிலும் ஒரே சமயத்தில் பல்வேறு நபர்களின் வேலைகளைச் செய்ய வேண்டிய இக்கலைஞர், பெருத்தசப்தத்துடன் இயங்கக்கூடிய இயந்திரம் தான். கதையின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, சம்பவங்களின் உக்கிரம் கூடக்கூட இக்கலைஞரின் ஒட்டு மொத்தஉடலசைவும் வேகமெடுத்து பிரவாகமாய் ஓடிக் கொண்டிருக்கும். படுதாக்களால் மறைக்கப்பட்ட திரைச்சீலையின் பின்புறம் சென்று கூத்தைத் துவங்கியதுமுதல் அதிரத் துவங்குகிற இக்கலைஞர் கூத்தை முடித்துவிட்டு வெளிவருகையில் ஆடிக்களைத்து மல்லாந்து வீழ்ந்த பாவைகளுக்கும் அவருக்கும்வித்தியாசமில்லை.

பரமசிவராவ் போன்ற பாவைக்கூத்துக் கலைஞர்களின் துடிக்கும் உடலியக்கத்தை பார்வையாளர்கள் என்றைக்குமே பார்க்க முடிந்ததில்லை.அவ்வியக்கம் புனைகதையாக உருமாறி வண்ண நிழலோட்டங்களாக மிளிர்வதை மட்டுமே அவர்கள் அறிந்து வந்திருக்கிறார்கள். அதன் பின்புறம் ஒருகலைஞன் பாவைகளோடு நடத்தும் ஊழிக்கூத்து பார்வையாளகளுக்கானது இல்லை.

ஆனால், பரமசிவராவைப் பொறுத்த அளவில் பாவைக்கூத்து என்பது பாவைகளோடு கொள்ளும் மின்னல் வேக அசைவுகள் தான். அவரது உலகில்பாவைகள் நிதானமாய் நகர்பவையல்ல. புனைகதையின்படி சோகமே உருவாய், மெல்லிய அசைவுகளுடைய அசோகவனத்து சீதை, திரைச்சீலையில்நிதானமாய் நகர்ந்தாலும், அந்நிதானத்தை நிகழ்த்துவதற்கு கலைஞன் அசுரவேகத்தில் இயங்க வேண்டியிருக்கும்.

தோற்பாவை நிழற்கூத்தை பார்வையாளர்களாக உள்வாங்குவதற்கும், கூத்துக் கலைஞராகப் புரிந்து கொள்வதற்குமான வேறுபாடு நமக்குமலைப்பையே ஏற்படுத்துகிறது. நளினமும், சிருங்காரமும், வண்ணம் கசியும் ஒளியும், தன்போக்கில் இழுத்துச் செல்லும் கதையாடலுமென அழகுசொட்டுகிறது நாம் பார்க்கும் பாவைக்கூத்து. ஆனால் அதற்காக, ஏறக்குறைய அதன் எதிர் திசையில், கதையின் வேகத்திற்கு இணையாக,கதாபாத்திரங்களின் உக்கிரத்திற்கு ஈடுகொடுத்துக் கொண்டு, புனையப்பட்ட காலவெளியில் பாவைகளோடு விரைந்து கொண்டிருக்கிறது கலைஞர்களின்உலகம். சிருங்காரம் மிளிரும் கலை வெளிப்பாட்டிற்குப் பின்னால் உடல் வலியும் வேதனையும் பிடுங்கித் தின்ன கலைஞர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்என்பது பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட வேண்டிய உண்மை.

பரமசிவராவிற்கும் தோற்பாவைகளுக்குமான உறவை யோசிக்கையில் கூத்து சார்ந்ததாக மட்டுமே அமைந்திருப்பது விளங்குகிறது. பாவைகளோடுஅவரது கைகள் புரளத் துவங்கிய மறுகணமே அவரது உடல் புனைவின் தாளகதியில் இயங்கத் துவங்கிவிடுகிறது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு பதட்டம்போலவும், பரபரப்பு போலவும் காட்சி தரும் அவரின் அசைவுகள், திரைச் சீலையில் வண்ண நிழல்களாக மாறும் பொழுது கதையாடலாக விரிகிறது.

தோற்பாவைகளை நிதானமாய் கையாளுவது என்றால் என்ன? என்று பரமசிவராவ் கேட்ட கேள்வி எந்த உலகத்தைச் சார்ந்தது?பார்வையாளர்களான எங்களைப் பொறுத்த வரையில், அக்கேள்வியில் அறியாமையும், வெகுளித்தனமும் நிரம்பி வழிந்தன. ஆனால், இதே கேள்விகலைஞனின் உலகில் எவ்வளவு தீர்க்கமான, தர்க்க ரீதியான, பகுத்தறிவு சார்ந்தவொன்றாக மாறுகிறது?

தோற்பாவைகள், அவைகளின் இயந்திர யோனித் துளைகள், வண்ணங்கள், பாவைகளின் முதுகெலும்பாய் நிற்கும் மூங்கில் குச்சிகள், பெரிய சைஸ் குண்டுபல்புகள், குறுக்கும் மறுக்குமாய் ஓடும் தாம்புக் கயிறுகள், அங்குமிங்குமென அலையும் வலது இடது கைகள், பாவைகளை தாங்கிக் கொள்ளும் கால்விரல்கள், திரைக்கு அப்பால் சப்தமிடும் பார்வையாளர்கள், புராணக் கதையோட்டங்கள், பாவைகளின் துள்ளல், துவளல், ஆடல், நெளிவு, கர்ணம் என்றுகூத்துக் கலைஞனின் உலகம் வேறொரு ஒழுங்கில், வேறொரு உலகமென இயங்கிக் கொண்டிருக்கிறது.

தோற்பாவை நிழற்கூத்துக் கலைஞர்கள் மட்டுமல்ல, எல்லாக் கலைஞர்களுமே தங்களுக்கேயுரிய உலகமொன்றைக் கொண்டிருக்கிறார்கள்என்றுதான் சொல்ல வேண்டும். அந்த உலகம் அவர்களது ஞாபகங்களாலும், வாசனைகளாலும், தேவைகளாலும், விளக்கங்களாலும்நெய்யப்பட்டிருக்கிறது. சடங்குகளும், சம்பிரதாயங்களும் அங்கே கறாராய்க் கடைபிடிக்கப்படுகின்றன. அவ்வுலகம் நிர்பந்திக்கிற சங்கடங்களும்,வேதனைகளும் அதனை மேலும் மேலும் பொருள்கூடியதாய் மாற்றிக் கொண்டிருக்கிறது. சிலருக்கு அது தெய்வ சந்நிதானம்; சிலருக்கு போதை; வேறுசிலர் அவ்வுலகினுள் பித்தம் தலைக்கு ஏறி முடிவுறாது உலாவந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு முறை வில்லுப்பாடகர் முத்துசாமிப் புலவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவரும் இப்படியே தான் சொன்னார். பலகைகளாலும், மரக்கட்டைகளாலும்அப்பொழுது தான் கட்டப்பட்டிருந்த வில்லுப்பாட்டு மேடையைப் பார்த்து, இந்த மேடை பல லட்சம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது என்றார். அந்தமேடையில் எனக்கு முன் வியாசமுனி துவங்கி எத்தனை எத்தனையோ பாடகர்கள் வந்து கதையைப் பாடியாச்சு. அதன் தொடர்ச்சியாகவே இன்றைக்கும்நான் பாடிக் கொண்டிருக்கிறேன். நான் பாடுவதை எனது கலைமுன்னவர்கள் அத்தனை பேரும் அதோ ஆகாயத்தில் நின்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு கலைஞனும் தனது கலையைப் பற்றி இவ்வாறு விதவிதமாகக் கற்பனை செய்தபடியே வாழ்ந்து வரமுடிகிறது. இந்தப் பண்பாட்டின் நீண்ட பெரும்கதைசொல்லி மரபில் தன்னை இணைத்துக் கொள்வதன் மூலம் முத்துசாமிப் புலவர் தனது தனித்தன்மையை இழந்து விடுகிறாரா அல்லது வானுயர வளர்ந்துவிடுகிறாரா? இதனை நாம் விளங்கிக் கொள்ளும் இடைவெளியில் முத்துசாமிப் புலவர் போன்றவர்கள் வெள்ளையாய் சிரிக்க மட்டுமே செய்கிறார்கள்.

பொன்ன குறிச்சியில் பேசிக் கொண்டிருந்த குயவர் இன்னொரு வகை. தாமிரபரணி நதிப்படுகை மண்ணைக் குவித்து, சண்டு கலந்து மண்பாண்டங்கள் செய்கிறகுடும்பம். தலைமுறை தலைமுறையாய் மண்சார்ந்த வாழ்க்கை. தங்களுக்கென சாமி சிலை செய்ய வேண்டி வந்ததால் மண்ணையே குழைத்து செய்து கொண்டிருந்தார்.அம்மன் பாதி தூரம் வளர்ந்திருந்தாள். முழுதும் வளர்ந்த பின், சுட்டு எடுத்தால், ஜொலிப்பாளாய் இருக்கும்.

இப்பொழுதெல்லாம் சாமி சிலைகளைக் கல்லில் வடிப்பது தானே வழக்கம்? நீங்கள் குயவர் என்பதால் சுடுமண் சிற்பமாக செய்கிறீர்களா?

சிலை செய்து கொண்டிருந்த குயவர் கொஞ்ச நேரம் போல் சென்று, இல்லை. கல்லை விடமண்ணு தாங்க கடினமானது என்றார்.

அவசரத்தில் மாற்றிச் சொல்கிறார் என்று பட்டது. மண்ணை விடவும் கல் தானே இறுக்கமானது? நீங்கள் மாற்றிச் சொல்கிறீர்களே?

இல்லையே, மாற்றிச் சொல்லவில்லையே. சரியாகத் தானே சொல்கிறேன். கல்லைவிட மண் தான் கடினமானது, சக்தி வாய்ந்தது, தொடர்ந்துஅம்மனை வனைந்து கொண்டேயிருந்தார். கல்லுக்குள் ஒரு பொருளைப் போடுங்க. மண்ணுக்குள்ளயும் போடுங்க. மண்ணுக்குள்ள போட்டது நாளடைவில அழிஞ்சிபோகும்? ஆனால் கல்லுக்குள்ள போட்டது? அப்படியே இருக்கும். இப்ப சொல்லுங்க, எது சக்தி வாய்ந்தது? கல்லா, மண்ணா?

தன்னுள் விழுகிற அனைத்தையும் தானாகவே மாற்றிவிடுகிற மண்ணின் சக்தி கல்லிற்கு இல்லைதான். கல், அசையாமல் இருக்கிறது. மண் தொடர்ந்துஇயங்கிக் கொண்டிருக்கிறது. கடினம் என்பதும் சக்தி என்பதும் பொருளின் இயல்பில் இல்லாமல், அவற்றின் விளைவில் மறைந்திருப்பதை பொன்னகுறிச்சிகுயவர் குடும்பம் சொல்லிக் கொண்டிருக்கிறது.

அப்படியானால் அவர்கள் ஒவ்வொரு முறை மண்பாண்டங்கள் செய்கையிலும், கல்லை விடவும் கடினமான மண்ணைத்தானே பயன்படுத்திக்கொள்கிறார்கள். நாம் அறிந்திருக்கும் பொலபொலவென உதிரும் மண், குழையும் மண் அவர்களது உலகில் இருக்கவில்லை என்பது எவ்வளவுஆச்சர்யம். காலம் காலமாய் மண்ணை மிதித்து, கைகளால் வளைத்து, வித வித உருவங்களில் வனைந்த மரபு தனது மண்பாண்டக் கலையை மையமிட்டுஉருவாக்கியுள்ள உலகம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் இல்லை.

THANKS
கலாச்சார மாத இதழ் - மார்ச் 2005
மிகப் பெரிய நதிகளின் உற்பத்தி ஸ்தானங்களுக்குச் சென்று பார்ப்பவர்கள் வியப்பில் மூழ்குவர். கண் முன் தெரியும் இந்த சிறிய நீர்ப் பெருக்கு போகப் போக எப்படி மகாநதியாகிப் பெரும் பிரவாகமாகச் செல்கிறது என்று காண்பதே ஓர் அதிசயம்.

இத்தனை சிறிய நீர்ப்பெருக்காக இருக்கிறோமே என்று சுய விமர்சனத்தோடு நதி அங்கேயே தேங்கி நின்று விடுவதில்லை. இருக்கும் இடத்தில் இருந்து முன்னேறுவதே அதன் லட்சியம். அப்படி முன்னேறிப் பாய்கையில் சிறு சிறு நீர்ச்சுனைகள், ஓடைகள் எல்லாம் வழியில் அதனுடன் சேர்ந்து அதன் அளவும் வேகமும் அதிகரிக்கின்றன. அப்போது கூட ஓரளவு வளர்ந்து விட்டோமே என்று பெருமிதத்துடன் தேக்கமடைந்து அது தங்கி விடுவதில்லை. முன்னேற்றமே அதற்கு முக்கியம். அது தன் பயணத்தைத் தொடர்கிறது.

வழியில் நிச்சயமாகத் தடைகள் இருக்கத்தான் செய்கின்றன. அத்தடைகள் மற்றவர்கள் செய்த சதி என்று புலம்பி நதி செயலற்று நிற்பதில்லை. தடை சிறியதென்றால் நதி தாண்டிச் செல்லும்; பெரியதென்றால் அதைச் சுற்றி வளைத்துச் செல்லும். தடைகளின் இயல்பு குறித்து விமர்சிப்பதும், தடைகள் தானாக விலகும் என்று காத்து நிற்பதும் தன் பயணத்திற்கு உதவாது என்பதை நதி நன்கு அறியும்.

பல இடங்களில் அதன் வழி கரடு முரடாக இருக்கும். அதைக் கண்டு நதி எப்போதும் திரும்பிப் போவதில்லை. சில இடங்களில் மிக அழகான சூழ்நிலைகளும் இருப்பதுண்டு. அதைக் கண்டு நதி அங்கே தங்கி விடுவதுமில்லை.

ராபர்ட் ·ப்ரோஸ்ட் (Robert Frost) என்ற ஆங்கிலக் கவிஞன் சாகா வரிகளில் கூறியது போல, நதி "I have miles to go before I sleep)-"நான் ஓயும் முன்னே சாதிக்க வேண்டியது இன்னமும் நிறைய உள்ளது" என அங்கிருந்தும் முன்னேறித் தான் செல்கிறது. இத்தனை தூரம் வந்து விட்டாயே, களைப்பாக இருக்குமே, சற்று இளைப்பாறிப் போ என்று யாராவது கூறினாலும் நதி இளைப்பாறுவதில்லை.

தான் செல்கின்ற இடம் எல்லாம் செழிப்படையுமாறு செய்தாலும் நதி அகம்பாவம் கொள்வதில்லை. ஒரு கர்மயோகியைப் போல் அது தன் பயணத்தைத் தொடர்கிறது. பல லட்சக்கணக்கானோர் பயன்பெறும் விதத்தில் பயணம் செய்யும் நதி, முடிவில் கடலில் தன் தனித்துவத்தை விட்டு இரண்டறக் கலக்கும் போதும் கூட கலங்குவதில்லை. வாழ்வை நிறைவாகவே முடிக்கிறது.

மனிதனே நீ நதியைப் போல் இரு. உன் ஆரம்ப நிலையை எடை போட்டுக் குறுகிய வாழ்க்கை வாழ்ந்து விடாதே. ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து முன்னேறு. வழியில் கண்டிப்பாக வாய்ப்புகளைக் காண்பாய். சிறிய சாதனைகளிலேயே பெருமிதம் அடைந்து நின்று விடாதே. தொடர்ந்து சிறந்து செயல் புரி. தடைகள் வரத்தான் செய்யும். தடைகளுக்குக் காரணங்களையும், காரணமானவர்களையும் பட்டியல் போடாதே. பயனில்லை.

தொடர்ந்து முன்னேறு. பாதை கடினம் என்று பயணத்தை முடித்து விடாதே. உன் பயணத்தைப் பாதைகள் தீர்மானிக்க விட்டு விடாதே. சில சௌகரியமான நிலைகளை அடையும் போது நின்று தங்கி விடாதே. அவற்றையும் மீறி முன்னேறும் போது தான் நீ சரித்திரம் படைக்க முடியும். நதியிடம் இருந்து இந்த மகத்தான ரகசியத்தைக் கற்றுக் கொள். உன் இலக்கை அடையும் முன் இளைப்பாறி விடாதே.

உன் வாழ்க்கைப் பயணம் சிறப்பாக இருந்தால் நீ சந்திப்பவர்கள் எல்லாம் உன்னால் பயன் பெறுவர். பலர் சிறக்க நீ பயன்படுவாய். கர்வம் கொள்ளாதே. இத்தனையும் சாதித்து உன் இனிய வாழ்வை இறைவனிடம் ஒப்படைக்கும் போதும் மனிதனே நீ நதியைப் போலிரு. "நான்" என்ற உணர்வை விட்டு "எல்லாம் நீ" என ஆனந்தமாய் பரிபூரணமாய் இறைவனை சரணாகதி அடைவாயாக'





ஒருவன் ஒரு ஞானியிடம் சென்று கேட்டான். "மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவன் விதியா, இல்லை அவன் மதியா?".

ஞானி சொன்னார். "ஒரு காலை உயர்த்தி மறு காலால் நில்"

கேள்வி கேட்டவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனாலும் இடது காலை உயர்த்தி வலது காலால் நின்றான்.

ஞானி சொன்னார். "சரி அந்த இன்னொரு காலையும் உயர்த்து"

அவனுக்குக் கோபம் வந்து விட்டது. நம் நடிகர் வடிவேலு மாதிரி "என்ன சின்ன பிள்ளைத்தனமாக இருக்கு" என்று சீறினான். "இரண்டு காலையும் உயர்த்தி எப்படி ஐயா நிற்பது?"

ஞானி அமைதியாகச் சொன்னார். "நான் காலைத் தூக்கச் சொன்ன போது எந்தக் காலைத் தூக்குவது என்று தீர்மானம் செய்தது உன் மதி. ஒரு முறை தீர்மானித்த பிறகு மறு காலையும் ஒருசேரத் தூக்கி நிற்க முடியாது என்பது விதி. பாதியை உன் மதி தீர்மானிக்கிறது. மீதியை உன் விதி தீர்மானிக்கிறது"

அந்த ஞானியின் வார்த்தைகளில் சூட்சுமமான இன்னொரு உண்மையும் இருக்கிறது. விதி என்பதே முன்பு நாம் மதி கொண்டு தீர்மானித்ததன் பின் விளைவாகவே பெரும்பாலான நேரங்களில் இருக்கின்றது.

விதியையும் மதியையும் விளக்க இன்னொரு உதாரணமும் மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

வாழ்க்கை ஒரு விதத்தில் சீட்டாட்டத்தைப் போல. குலுக்கிப் போடும் போது எந்தச் சீட்டுகள் வருகின்றன என்பது விதி. கையில் வந்த சீட்டுக்களை வைத்து எப்படி நீங்கள் ஆடுகின்றீர்கள் என்பது மதி. எந்தச் சீட்டு வர வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் சீட்டுக்கள் கைக்கு வந்த பின் ஆடுவது நம் மதியிடம் உள்ளது. நல்ல சீட்டுக்கள் வந்தும் ஆட்டத்தைக் கோட்டை விடுபவர்கள் உண்டு. மோசமான சீட்டுக்கள் வந்தாலும் கவனமாகவும், புத்திசாலித்தனமாகவும் ஆடி வெற்றி பெறுபவர்களும் உண்டு.

சிந்திக்கையில் வாழ்க்கையை விதியும் மதியும் சேர்ந்தே தீர்மானிக்கிறது என்பதே உண்மையாகத் தோன்றுகிறது. ஆனால் மன உறுதியும், கடின உழைப்பும் மதியுடன் சேரும் போது அது விதியைத் தோற்கடித்து விடுகின்றது என்பதற்கு ஹெலன் கெல்லர் அருமையான உதாரணம்.

குருடு, செவிடு, ஊமை என்ற மிகப்பெரிய உடல் ஊனங்களை விதி ஹெலன் கெல்லருக்குக் கொடுத்தது. ஆனால் மன உறுதியாலும், கடின உழைப்பாலும் பேசும் சக்தியைப் பெற்றதோடு பிற்காலத்தில் சிறந்த பேச்சாளராகவும் புகழ் பெற்றார்.

விதி நமக்குத் தருவதை அப்படியே ஏற்றுக் கொண்டு முடங்கிக் கிடக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதையே மூலதனமாக எடுத்துக் கொண்டு மதியால் எத்தனையோ செய்ய முடியும். கால நேர சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டு மதி கொண்டு உழைத்தால் அந்த விதியும் வளைந்து கொடுக்கும்.

எனவே விதி மிக சக்தி வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் விதி மட்டுமே ஒருவனது வாழ்க்கையைத் தீர்மானித்து விடுவதில்லை என்பது மதி படைத்த மனிதர்களுக்கு நற்செய்தி.


காலத்தை வென்று பிரகாசியுங்கள்











ஒரு துறையில் நீங்கள் சில ஆராய்ச்சிகள் செய்கிறீர்கள். உங்கள் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின் சில விஷயங்களைக் கண்டுபிடிக்கிறீர்கள். அதை உலகுக்கு அறிவிக்க நினைக்கிறீர்கள். அந்த அறிவிப்பு விழாவுக்குஅந்தத் துறையில் உச்சாணிக் கொம்பில் உள்ள அறிஞரை அழைக்கிறீர்கள். அவர் உங்களுடைய ஆதர்ச புருஷரும் கூட. நீங்கள் மிகுந்த சிரத்தையுடன் உங்கள் கண்டுபிடிப்புகளைப் பற்றிச் சொல்கிறீர்கள். சொல்லி முடித்த பின் உங்கள் ஆதர்ச புருஷரின் கருத்துக்காகக் காத்திருக்கிறீர்கள். உங்கள் கண்டுபிடிப்புகளை உலகப்புகழ் பெற்ற அவர் "வடிகட்டிய முட்டாள்தனம்" என்று வர்ணிக்கிறார். பத்திரிக்கையாளர் கூட்டத்தில் முட்டாள்தனம் என்று தான் சொன்னதற்கான காரணங்களைப் புட்டு புட்டு வைக்கிறார்.

உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? உங்கள் தன்னம்பிக்கை எந்த அளவில் நிற்கும்? அந்தத் துறையில் தொடந்து இருப்பீர்களா இல்லை அதற்கு முழுக்குப் போட்டு விடுவீர்களா?

இப்படி ஒருவர் வாழ்வில் உண்மையாகவே நடந்தது. அவர் சந்திரசேகர் என்ற வானியல் விஞ்ஞானி. அவர் உலகப்புகழ் பெற்ற வானியல் அறிஞர் ஆர்தர் எட்டிங்டன் என்பவரின் எழுத்துக்களால் உந்தப்பட்டு நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். தன் 24ம் வயதிற்கு முன்பே (1935ல்) நீண்ட ஆராய்ச்சிக்கு பின் தன் கண்டுபிடிப்புகளை வெளியிட முடிவு செய்தார். அவர் ஆர்தர் எட்டிங்டனுக்கும், மற்ற வானியல் அறிஞர்களுக்கும், அறிவியல் பத்திரிக்கைகளுக்கும் அழைப்பு விடுத்து அவர்கள் முன்னிலையில் தன் கண்டுபிடிப்புகளை மிகுந்த ஆர்வத்தோடு வெளியிட்டார்.

ஆனால் யாருடைய எழுத்துக்களால் கவரப்பட்டு அவர் அந்தத்துறையில் ஆராய்ச்சி நடத்தினாரோ, அந்த எட்டிங்டனே இவருடைய நட்சத்திர ஆராய்ச்சியின் முடிவுகளை முட்டாள்தனம் என்று வர்ணித்தார். இவர் கூறியது போல நட்சத்திரங்கள் இயங்குவதில்லை என்று கூறிய அவர் அதற்கான விளக்கங்களையும் அளித்தார். அந்தத்துறையில் ஒரு மேதையான அவரே அப்படிக் கூறியதால், சந்திரசேகர் கருத்துக்களில் உடன்பாடு இருந்த மற்ற அறிஞர்கள் வாயையே திறக்கவில்லை.

சந்திரசேகர் பின்னாளில் அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்த போது கூறினார். "அவர் என்னை அந்தக் கூட்டத்தில் முட்டாளாக்கி விட்டார். எனக்கு அது ஒரு பெரிய தலைகுனிவாக இருந்தது. அந்தத்துறையில் ஆராய்ச்சிகளை முற்றிலுமாகக் கைவிட்டு விடுவது பற்றி கூட யோசித்தேன்."

தோல்வியும் மனத்தளர்வும் எல்லோருக்கும் சகஜம் என்றாலும் வெற்றியாளர்களுடைய சோர்வும், மனத்தளர்வும் மிகக்குறுகிய காலமே அவர்களிடம் காணப்படுகின்றன. அவர்கள் மிக வேகமாக அதிலிருந்து மீண்டு விடுகிறார்கள். இந்த விஷயத்தில் தான் தோல்வியாளர்கள் முக்கியமாக வித்தியாசப்படுகிறார்கள். இவர்கள் அந்த நிராகரிப்பை ஏற்றுக் கொண்டு பின் வாங்கி விடுகிறார்கள். பின் அந்தப்பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை.

அமெரிக்க இந்தியரான சந்திரசேகரும் அந்த கசப்பான அனுபவத்திலிருந்து விரைவாகவே மீண்டு தன் ஆராய்ச்சிகளை அந்தத் துறையில் தொடர்ந்தார். சந்திரசேகருடைய எந்தக் கண்டுபிடிப்புகளை எட்டிங்டன் முட்டாள்தனம் என்று வர்ணித்தாரோ அதற்கு 48 வருடங்கள் கழித்து 1983ல் நோபல் பரிசு கிடைத்தது. வானியல் துறையில் ஒரு வரையறைக்கு "Chandrasekhar' s Limit" என்ற பெயர் சூட்டப்பட்டது.

அவர் ஒரு வேளை பின் வாங்கியிருந்தால், தன் கண்டுபிடிப்புகளை தீயிலிட்டுக் கொளுத்தி விரக்தியுடன் அந்தத் துறையிலிருந்து விலகியிருந்தால் என்னவாயிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். எத்தனை பெரிய அறிஞரானாலும் சரி அவருடைய கருத்து எல்லா சமயங்களிலும் சரியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொள்வது நல்லது.

சந்திரசேகருக்குத் தூண்டுகோலாய் இருந்தது அந்தத் துறையில் இருந்த இயல்பாகவே இருந்த அதீத ஆர்வம் தான். வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாது ஒன்றில் தொடர்ந்து சாதிக்க வேண்டுமானால் அந்த ஆர்வம் உண்மையானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்து, போராட்டங்களுக்குப் பிறகு வெற்றியைப் பெற்ற நல்ல உள்ளங்கள் என்றும் அந்தத் துறையில் வளர்ந்து வரும் இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டியாகவும், அக்கறையுடன் உதவுபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு சந்திரசேகர் ஒரு நல்ல உதாரணம்.

அவர் விஸ்கான்சின் நகரில் உள்ள யெர்க்ஸ் வானிலை ஆராய்ச்சிக் கூடத்தில் பணியாற்றி வந்தார். அப்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் துறையைக் கற்பிக்கும் பகுதி நேரப் பேராசிரியராகவும் பணி புரிந்தார். வாரம் இரண்டு நாள் வகுப்பு. விஸ்கான்சினிலிருந்து 80 கி.மீ தனது காரில் பயணம் செய்து பாடம் நடத்தினார். கடும் குளிர்காலத்தில் சாலைகளில் எல்லாம் பனிக்கட்டிகள் உறைந்திருக்கும் என்பதால் காரை ஓட்டிச் செல்ல மிகுந்த சிரமப்பட்டார் அவர். ஆனாலும் விடாமல் உற்சாகமாகச் சென்று அவர் பாடம் நடத்தியது எத்தனை பேருக்குத் தெரியுமா? வகுப்பறையில் இருந்த இரண்டே பேருக்குத் தான்.

அவருடைய சிரமத்தைப் புரிந்து கொண்ட சிகாகோ பல்கலைக்கழக நிர்வாகிகள் "இரு மாணவர்களுக்காக இந்தக் கடும்பனியில் 160 கி.மீ பயணம் செய்து நீங்கள் வரவேண்டியதில்லை. எங்கள் பல்கலைகழக விதிகளின் படி ஏதாவது பாடத்தில் நான்கு மாணவர்களுக்குக் குறைவாக இருந்தால் அந்தப் பேராசிரியர் வகுப்பு எடுக்க வேண்டியதில்லை" என்று சொன்னார்கள்.

ஆனால் அதற்கு சந்திரசேகர், "ஆர்வத்தோடு படிக்க வரும் இந்த இரு மாணவர்களை ஏமாற்ற விரும்பவில்லை" என்று கூறி தொடர்ந்து ஒரு வகுப்பு கூட தவறாமல் அந்தக் கோர்ஸின் காலமான ஆறு மாதங்களும் பாடம் எடுத்தார். அவருடைய முயற்சியின் பல என்ன தெரியுமா? Chen Ning Yang, Tsaung-Dao Lee என்ற அந்த இரு மாணவர்களும் கூட பின்னாளில் நோபல் பரிசு பெற்று அவருடைய முயற்சிக்குப் பெருமை சேர்த்தார்கள்.

சந்திரசேகரை அந்தக் கடும்பனிப் பாதை பெரியதாகப் பாதிக்கவில்லை என்பதற்குக் காரணமே அவர் அதை விடக் கடுமையான வாழ்க்கைப் பாதைகளைக் கடந்து வந்திருக்கிறார் என்பதே. இளம் வயதில் எட்டிங்டன் கருத்தால் தன்னுடைய ஆர்வத்தை இழந்து விடாமல் காத்துக் கொண்ட அந்த மேதை அதே ஆர்வம் கொண்ட அந்த மாணவர்களுக்கும் அது குறைந்து விடக்கூடாது என்று கொட்டும் பனியில், உறைபனிப் பாதையில் சென்று பாடம் நடத்தினாரே அது இன்னும் பெருமைக்குரிய காரியம் அல்லவா?

உண்மையில் ஒரு துறையில் பேரார்வம் உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் அதில் ஏதோ சாதித்துப் பிரகாசிக்க முடியும் என்று அர்த்தம். மற்றவர்கள் உங்கள் ஒளியை மறைத்து விட முடியாது. உங்கள் பேரார்வமும், அது தூண்டும் உழைப்புமாகச் சேர்ந்து உங்களைத் தீபமாகப் பிரகாசிக்க வைக்கும். அப்படித் தீபமாகப் பிரகாசிப்பது பெருமைக்கும், பாராட்டுக்கும் உரிய விஷயம் தான். ஆனால் நீங்கள் அணையும் முன் பல தீபங்கள் ஏற்ற உதவியாக இருந்தால் உங்கள் ஜோதி நீங்கள் அணைந்த பின்னும் பல தீபங்களாக ஒளிவீசிக் கொண்டேயிருக்கும். நீங்கள் காலத்தை வென்று பிரகாசித்துக் கொண்டிருக்க முடியும்.

பிரகாசிப்பீர்களா?



நன்றி: விகடன்



வெண்ணிக் குயத்தியார்





வெண்ணிக் குயத்தியார் சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண் கவி. குயவர் குலத்தைச் சேர்த இவரின் ஒரு பாடல் மட்டும் புறநானுற்றில் 66 பாடலாக அமைகிறது.



புறநானூறு 66" நல்லவனோ அவன்!

பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்: வெண்ணிற் குயத்தியார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: வாகை. துறை: அரச வாகை.


நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,

வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!

களி இயல் யானைக் கரிகால் வளவ!

சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற

வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே

கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,

மிகப் புகழ் உலகம் எய்திப்,

புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே
நான் புத்தன்




கடைக்குக் காவலாக
சட்டை இல்லா முதலாளி
மட்பாண்டம் விற்றால்தான்
மறைக்கக் கிடைக்கும் துணி

மண் எடுத்துப் பிசைந்து
அளவாய் நீர் சேர்த்து
குடமொன்று ஏற்றி
குவிவாய் வாய் செய்து
கனக்கக் கனக்க
பாண்டம் பிசையும் தொழில்
பாரினிலே படைத்தல் தொழில்

பொங்கலுக்குப் பானை
கார்த்திகைக்கு விளக்கு
ஏற்றி வைத்தால் எப்போதும்
காற்றடித்தாலும் அணையா அடுப்பு
வண்ணக் கிளிஞ்சட்டி
வண்ணப் பானைகள்
நீர் விட்டுச் செடி வளர்க்க
நெட்டைத் தொட்டிகள்
எல்லாம் மண்தான்
என்றாலும் மகத்துவம்தான்
வார்ப்புக்கு உள்ளானால்
மண்ணும் பொன்னாகும்


மண்ணாயினும் மனிதனாயினும்
படைப்பு உயிராகும்
சொல்லாயினும் எழுத்தாயினும்
பொருள் கொண்டால் படைப்பாகும்.


என்னதான் ஆனாலும்
இதே தத்துவத்தில்
போலிகளும் கலந்து போக
மண் ஆகும் என் பிழைப்பு


பூப் போலே வண்ணத்தில்
பொன் போலும் மின்னலிலே
கண் பறிக்கும் கயமையாலே
பிளாஸ்டிக்கே உலகமாச்சு


பொன் வைத்த இடத்தில்
பூ வைத்து ஒரு காலம்
பூ வாய்த்த இடத்தினிலே
மண் வைத்த காலம் மாறி
எது வைத்த போதிலுமே
பிளாஸ்டிக்கே முன் நிற்கும்
மின்னும் பொன்காலம்
மின்னஞ்சல் கற்காலம்


இடுப்புகளின் இரண்டு பக்கம்
எடுக்கும் நீர் பெண் சுமக்கும்
அழகெல்லாம் போயாச்சு
அறிவியலும் வளர்ந்தாச்சு


கார்த்திகை மையிருட்டினிலே
சிரட்டைக்குள் கிளிஞ்சல் ஏற்றி
டார்ச் அடித்து ஊர்வலங்கள்
எல்லாம் பொய்யாச்சு


பொம்மைக் காரோட்டி
பொழுதெல்லாம் வீணாக்கி
இருந்த இடம் விட்டு
நகராத விளையாட்டு


ஐம்பூதம் அளவறிந்து
அடக்கி ஆட்சி செய்து
காலம் மிகக் கருதி
கணத்தில் சமையல் செய்த
காலம் மலை ஏறிற்று.


உருளைக்குள் வாய்வடக்கி
ஓட்டையிலே தீக் கொளுத்தி
காலத்திற்கு கருவி வைத்து
குக்கரிலே வேகும் சோறு
உண்பதற்கு வெறும் பதறு


ஊருக்கு மரம் நட்டு
உறவெல்லாம் பழம் தின்ன
யாரும் நீர் விடாது
தானே வளரும் தலைமுறைகள் போய்


பேருக்குச் செடியென்று
காகிதம் போல் பூப்பூக்கும்
தொட்டில் குழந்தையாய்
தொட்டிக் குரோட்டன்சகள்!
ரிட்டைடு ஆன தாத்தா
தண்ணீர் விடும் மெசினானார்


எல்லாம் பார்த்து விட்டே
நிர்வாணமாய் நானிருக்கேன்
என் வயதிலியே நான் புத்தன்
ஆசனமோ பிளாஸ்டிக் மரம்


இறுதியாய் ஓன்று சொல்வேன்
உறுதியாய் நம்பி ஏற்பீர்
உடம்பாகும் மண் போலே
உற்ற துணை ஏதுமில்லே
மறந்தால் மனிதர் நீங்கள்
மண் ஆகும் உடல் பெறுவீர்
கைவினைஞர்கள் சூழ்ந்த உலகு





நிலத்தை உழுது தானியம் விளைவிக்கும் உழவர்களின் கூட்டம் ஒருபுறம்; கால்நடைகளை மேய்த்து மந்தையைப் பெருக்கி வாழும் இடையர்களின் கூட்டம் ஒருபுறம் என இரு வேறு தொழில்கள் செய்வோர்தான் கடந்த நூற்றாண்டில்கூட தமிழகத்தில் மக்கள் வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்கினர். கிராமம் என்றால் உழவர்களும், கால்நடை வளர்ப்பவர்களும் மட்டும் முதன்மையிடம் பெறும் நிலையில், சுய தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியது என்ற நிலையில் இன்னும் பலர் தேவைப்படுகின்றனர். இன்றைய ஆடம்பரமான தேவைகள் எதுவும் தேவைப்பட்டிராத கிராமங்களில், வேறுவகைப்பட்ட தேவைகள் குறைவு. எனினும் மக்கள் வாழ்க்கைக்குக் கைவினைஞர்களின் பணி மிகவும் அத்தியாவசியமானதாகும். மர ஆசாரி தொடங்கி பல்வேறு தரப்பினரின் உதவி/சேவையைக் கிராமத்தினர் பயன்படுத்திக் கொண்டதால்தான், அவர்கள் வேறு ஊருக்குப் புலம் பெயர்தல் குறித்துப் பெரிதும் அக்கறை கொள்ளவில்லை.

உழவுத் தொழில் செய்திட, நிலத்து மண்ணைப் புரட்டிட ‘ஏர்’ என்னும் மரக்கருவி அடிப்படையானது. மரத்தை வெட்டி, நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கி, துளையிட்டு, ஒன்று சேர்த்து ஏராக வடிவமைப்பதற்கு மர ஆசாரி தேவைப்படுகிறார். மரவேலை செய்வது பற்றிய தொழில் நுட்ப அறிவும், அதற்குத் தேவைப்படும் கருவிகளும் மர ஆசாரியிடமே இருந்தன.

ஏரின் நுனியில் பொருத்தப்படும், ஓர் அடி நீளமான ‘கொழு’ எனப்படும் இரும்புத்துண்டு அத்தியாவசியமானது. இரும்பை உருக்குவதுடன், இரும்பைப் பழுக்க நெருப்பில் காய வைத்து, சம்மட்டியால் தட்டி வேண்டிய வடிவில் உருமாற்றிட கொல்லர் எனப்படும் தொழில்நுட்பவாதி தேவைப்படுகின்றார். ‘கொல்லம்பட்டறை’ எனப்படும் இரும்பு வேலை தொடர்பான பட்டறை ஓரளவு பெரிய கிராமங்களில் எல்லாம் இருந்தது. தோலினால் செய்யப்பட்ட துருத்தியின் மூலம் நெருப்புஉலையினுள் காற்றைச் செலுத்தி, இரும்பைப் பழுக்கக் காய்ச்சிட முயன்றது நுட்பமான விஷயம். ‘கொழு’ இல்லாவிடில் கூர்மையான மர நுனியினால் மண்ணை உழுவது என்பது சிரமமானது.

உழவுக்குத் தேவைப்படும் மண்வெட்டி, கோடாரி, அரிவாள் போன்ற இரும்புக் கருவிகளைக் கொல்லர்கள் கிராமத்தினருக்குத் தாராளமாகச் செய்து வழங்கினர்.

சாமான்களையும் ஆட்களையும் இழுத்துச் செல்லும் மரவண்டிகளை மர ஆசாரிகள், தங்களுடைய கைவேலைத் திறமையினால் நுணுக்கமாகச் செய்தனர். மரச் சக்கரங்களுக்கு இரும்புப் பட்டா போட வேண்டியது அவசியம். இல்லாவிடில் மேடு பள்ளத்தில் ஏறி இறங்கும் மரச் சக்கரம் நொடியில் விழுந்து நொறுங்கிவிடும். இரும்புப் பட்டாவை நெருப்பிலிட்டுச் சூடேற்றி, மரச் சக்கரத்தில் திணிக்கும் கொல்லரின் கைத்திறனும் தனித்தன்மை வாய்ந்தது.

மரவண்டிகளை இழுத்துச் செல்லும் காளைகள் தொடர்ந்து பல மைல்கள் சுமையைத் தாங்கி இழுத்துச் செல்லும்போது, கால் குளம்புகள் தேய்ந்துவிடும். எனவே இரும்பிலான லாடங்கள் மாட்டின் குளம்புகளில் இரும்பு ஆணிகள் மூலம் பொருத்தப் பெற்றன. மாட்டின் குளம்புகளுக்கேற்ற இரும்பு லாடங்களை வடிவமைப்பதுடன், மெல்லிய இரும்பு ஆணிகள் தயாரிப்பதும் கொல்லர்களின் வேலையாக இருந்தது. அறுபதுகளில் எங்கள் ஊர் கொல்லம்பட்டறையின் முன்னர் ‘பட்டா’ போடுவதற்கான மாட்டு வண்டிகளும், லாடம் அடிப்பதற்காகக் காளைகளும் காத்துக் கிடந்தன.

கிராமத்தில் காரை வீடு எனப்படும் மச்சு வீடுகள் இருபது இருந்தால் பெரிய அதிசயம். அப்புறம் தென்னங் கைகள் மீது பாவப்பட்ட சீமை ஓட்டு வீடுகளும், பெரிய எண்ணிக்கையில் ஓலை வீடுகளும்தான் இருந்தன. தென்னை மரத்தை அறுத்துக் கைகளாக மாற்றிட ஆசாரியினால்தான் முடியும். ஊருக்கு வெளியே ‘ரம்பப் பள்ளம்’ இருந்தது. பத்தடி நீளமும் ஆறு அடி அகலமும் ஆறு அடி ஆழமும் மிக்க குழியின் மீது மரத்தை வைத்து, குழிக்குள்ளிலிருந்து ஒருவரும், குழிக்கு மேலிருந்து ஒருவரும் ரம்பத்தை மேலும் கீழும் இழுத்து, துண்டுகளாக்கினர். பெரும்பாலும் கேரளாவிலிருந்து வந்த மர ஆசாரிகள் ‘ரம்பக் குழி’யின் மூலம் கூலிக்காக மரத்தை அறுத்துத் தந்து கொண்டிருந்தனர். முன் மண்டையில் குடுமி வைத்திருந்த மலையாளி ஒருவர் -‘குடும்பி’ என்ற பட்டப் பெயரில் அழைக்கப்பட்டவர்-எங்கள் ஊரில் இருந்தார். வீட்டில் மலையாளம் பேசிக் கொண்டிருந்த அந்தக் குடும்பத்தினர் இன்று அடையாளம் இழந்து முழுக்கத் தமிழராகப் போய்விட்டனர்.

நுட்பமாக மரவேலைகள் செய்யத் தெரிந்த மர ஆசாரிகள் எங்கள் ஊரில் இருந்தனர். அணிப்பிள்ளை சுப்பையா போன்றவர்கள் மரவேலைக்குப் பெயர் பெற்றவர்கள். வீடு கட்டுகின்றவர்களிடம் மர ஆசாரிகள் பவ்வியமாகப் பேசினர். அவர்களும் ஆசாரிகளிடம் இணக்கமாகப் பேசினர். பரஸ்பரம் மரியாதை நிலவியது. வெறுமனே காசுக்காக வேலை பார்க்கின்றவர் என்று வீட்டுக்காரரும் நினைக்கவில்லை. வெறுமனே காசுதானே என்று ஏனோ தானோவென்று ஆசாரியும் வேலை செய்யவில்லை. கைவினைஞர்களுடன் ஆன உறவு ஒருவிதமான அன்னியோன்னியமாகக் கிராமத்தில் நிலவியது. இன்று கைவினைஞர்களுடனான உறவு வெறும் வணிக உறவாக மாறிவிட்டது.

மண்ணைப் பிசைந்து சரியான பக்குவத்தில், சுழற்றிவிடப்படும் சக்கரத்தின் நடுவில் வைத்துப் பானை அல்லது சட்டி அல்லது தட்டு என வடிவமைத்து, அவற்றை நிழலில் உலர்த்தி, சூளையிலிட்டுச் சுட்டு, எல்லோருக்கும் தேவைப்படும் பாத்திரங்களைத் தரும் குயவர்கள் வெறும் கைவினைஞர்கள் மட்டுமல்ல. மனிதநாகரிகத்திற்கான ஆதாரம். குடும்ப வாழ்க்கை, குடியிருப்புகள் தோன்றுவதற்கான பின்புலத்தில் யோசித்துப் பார்த்தால் சட்டி பானைகளின் முக்கியத்துவம் புலப்படும். இறைச்சி அல்லது தானியத்தை நேரடியாக நெருப்பிலிட்டு வாட்டுவது ஒரு புறம். சட்டியிலிட்டு அவற்றைச் சமைப்பது என்பது நாகரிகத்தின் வளர்ச்சியைக் காட்டுகின்றது. மனித இருப்பில் பக்குவப்பட்ட நிலை என்பது சமைக்கப்பட்ட உணவுடன் நெருங்கிய தொடர்புடையது. ஈரமான களிமண்ணிலிருந்து சட்டி, பானையை உருவாக்கும் தொழில்நுட்பம் அறிந்த குயவர்கள் மனித குல நாகரிகத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித நாகரிகம் பற்றிய மதிப்பீட்டினுக்கு அகழ்வாய்வுகளில் கிடைக்கும் மண்பாண்டச்சில்லுகள் முதன்மை ஆதாரங்களாக விளங்குகின்றன. பெரிய கிராமங்களில் வேளார் என அழைக்கப்படும் குயவர்களுக்கெனத் தனியாக நிலங்கள் கிராமத்தின் சார்பில் பயன்பாட்டினுக்கென விடப்பட்டிருந்தன. தங்கள் ஊருக்கெனக் குயவர் வேண்டும் என வெளியூரிலிருந்து அழைத்து வரப்பட்டவருக்கு ஊரின் சார்பில் மானியமாக நிலம் தரப்பட்டிருந்தது.

குயவர்கள் கிராமத்துக் காவல் தெய்வம் என அய்யனாருக்கு ‘மண்குதிரைகள்’ செய்து கொடுத்தனர். நேர்த்திக் கடன் செய்து கொண்டவர்களுக்காக மாடு, கன்றுக்குட்டி, நாய், பிள்ளைத் தொட்டில் போன்ற மண் பொம்மைகளும் செய்து கொடுத்தனர். மாரியம்மன் கோவிலில் தீச்சட்டி தூக்கி ஆடி வருகிறவர்களுக்கு, மண் சட்டியையும் செய்து தந்தனர்.

கோடைக்காலத்தில் புதிய மண்பானையில் தண்ணீரை வைத்துக் குடித்தால் ஜில்லென உடலுக்கு இதமாக இருக்கும். ‘பானாக்கம்’ எனப்படும் புளி, வெல்லம், எலுமிச்சை கலந்த பானம், புதிய மண்பானையில் தயாரித்து வைத்து, ஓரிரு மணிநேரம் கழித்துப் பரிமாறினால், குடிப்பதற்குக் குளிர்ச்சியாக இருக்கும்.

கிராமங்களில் யாராவது ‘அக்கி’ எனப்படும் தோல் நோயினால் துயரமடையும்போது, குயவரிடம்தான் செல்வார்கள். அவர் கோழி இறகு அல்லது மயில் இறகினால் சிவந்த மண் குழம்பை அக்கியின் மீது தடவிவிடுவார். சில நாட்களில் நோய் குணமாகிவிடும். அக்கி நோய்க்கு எனத் தனிப்பட்ட மருந்து எதுவுமில்லை. செம்மண் குழம்பு தடவுவதை அவர்கள் தொண்டாகச் செய்கின்றனர். அதற்கெனப் பணம் எதுவும் வாங்குவதில்லை.

குயவர்கள் கர்த்திகை அன்று வீடுகளில் விளக்கு எரிப்பதற்காக, ஊரிலுள்ள எல்லா வீடுகளுக்கும் கிளியாஞ்சுட்டி எனப்படும் சிறிய மண் விளக்குகளை இலவசமாக வழங்குவார்கள். இதற்கென ஊர் மானியம் அவர்களுக்கு உண்டு.

வயலில் அறுவடை முடிந்து களத்துமேட்டில் நெல் அளக்கும்போது, கடைசியில் கொல்லர், குயவர் இருவருக்கும் ‘சுதந்திரமாக’ நெல் வழங்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. நெல் நன்கு விளைந்து, மகசூல் நன்றாக இருந்தால், குடியானவர்கள் தாராளமாக அள்ளி வழங்குவார்கள். சில பகுதிகளில் நெல் அரிகளைக் கட்டாக அப்படியே வழங்குவதும் உண்டு. குடியானவர்களுக்காகச் செய்து தருகின்ற வேலைகளுக்குக் கொல்லரும், மண் பாத்திரங்களுக்குக் குயவரும் பணம் பெற்றுக் கொண்டாலும், தங்கள் ஊரிலுள்ள கைவினைஞர்கள் தொடர்ந்து நன்கு வாழ வேண்டும் என்பதற்காகக் களத்துமேட்டில் நெல் வழங்கும் முறையைக் கிராமத்தினர் பல்லாண்டுகளாகப் பின்பற்றி வந்திருக்கவேண்டும். மழை இல்லாமல், விவசாயம் சாவியாகப் போனால், அதனால் குடியானவர்களுடன் பாதிக்கப்படுவது, கைவினைஞர்களும்தான்.

கிராமத்தினர் அனைவருக்கும் ஏதோ ஒருவகையில் நெருங்கிய தொடர்புடையவர்கள் சலவைத் தொழிலாளரும் முடிவெட்டும் தொழிலாளரும் ஆவர். சமூக மதிப்பீட்டில் மிகவும் இழிவாகக் கருதப்பட்ட இவர்கள் முன்னொரு காலத்தில் மதிப்பு மிக்கவர்களாக இருந்திருக்கலாம். அல்லது ஏதோ ஒரு நிர்ப்பந்தம் காரணமாக இழிவாகக் கருதப்பட்ட தொழிலை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கலாம்.

நாவிதர் அல்லது அம்பட்டையர் என்று குறிப்பிடப்பட்டவர்கள் தலைமுறைகள் தோறும் முடிவெட்டுதல், சவரம் செய்தல், மொட்டை அடித்தல் போன்ற வேலைகளை கிராமத்தினருக்குச் செய்து வந்தனர். பேனும் ஈரும் மிகுந்து கரடிபோல அடர்த்தியான தலைமுடியுடன் திரியும் கிராமத்தினரை, தங்களுடைய ஒப்பனை மூலம் நேர்த்தியாக மாற்றும் கைவன்மை மிக்கவர்களாக இத்தகையோர் விளங்கினர். ஊருக்கு வெளியே மரத்தடி அல்லது சிறிய கீற்றுக் கொட்டகையில்தான் முடி அலங்கார நிலையங்கள் நடைபெற்றன. வெறும் உடம்புடன் உட்கார்ந்திருப்பவர்கள் தலையில் புகுந்து விளையாடும் கத்தரிக்கோல் தெறிக்கும் முடித்துகள்கள் உடல் எங்கும் பரவிடும். ஒரு சிறிய மிஷினை வைத்துச் சிறுவர்களின் தலையைச் சுற்றி நகர்த்துவதால் முடி இழுக்கப்படும்போது, வலியினால் தலை தானாகவே அசையும். ‘அப்பா தலையை அசைக்காதீங்க, காதை வெட்டிப்புடும்’ என்று எச்சரித்துக் கொண்டிருப்பார் முடிவெட்டுபவர். வட்டக் கிராப் எனப்படும் முடிவெட்டு தலையில் வட்டமான சட்டியைக் கவிழ்த்ததுபோல இருக்கும்.

வசதியானவர் வீடுகளுக்குச் சென்று காத்திருந்து, ஏழெட்டுப் பேருக்கும்கூட முடியை வெட்டிவிட்டுப் பொறுமையுடன் திரும்பிவரும் நாவிதர் வாழ்க்கை பொருளியல் ரீதியில் பலவீனமாக இருந்தது.

அரிசியில் அரை அளவுதான் முடி இருக்கவேண்டும் என்று சிறுவர்களிடம் பெற்றோர் சொல்லிவிடுவார்கள். அவர்கள் ஸ்டைலாக முன்னால் முடிவைக்கச் சொன்னாலும் முடிவெட்டுபவர் மறுத்துவிடுவார். தலையில் முடிரொம்ப இருந்தால் சளி பிடித்துவிடும் என்ற நம்பிக்கை நிலவியது.

கிராமங்களில் பலர் செருப்பு அணிவது கிடையாது. எனவே காலில் முள் குத்திக் கொண்டு சீழ்ப் பிடித்து அவதிப்படுவார்கள். பாதத்தில் நுழைந்த முள்ளின் முனை, உள்ளேயே முறிந்து தங்கிவிடுவதால், நடக்கமுடியாமல் சிரமம் ஏற்படும். முள்வாங்கியினால் கூட முள்ளை எடுக்கமுடியாதபோது, நாவிதரிடம் வருவார்கள். முள் குத்தியதால் சிரமப்படுகிறவரை ஓரிருவர் பிடித்து அமுக்கிக் கொள்ள, நாவிதர் சிறிய கூர்மையான கத்தியினால் முள் குத்திய இடத்தைக் கீறிவிடுவதுடன் சீழைப் பிதுக்கி வெளியேற்றுவார். ஓரிரு நாட்களில் முள் குத்திய இடம் குணமடையும். முள்ளை வெளியேற்றுவதற்காகச் செய்யும் வேலைக்கெனத் தனியாகப் பணம் எதுவும் தரமாட்டார்கள். நாவிதரின் பணி சேவை ஆகும். முடிவெட்டுவதுடன் கால் கை விரல்களில் வளர்ந்திருக்கும் நகங்களை வெட்டுதல், தலையைத் திருப்பிச் சொடக்கு முறித்து மசாஜ் பண்ணுதல் என நாவிதரின் பணிகள் பன்முகப்பட்டவையாக விளங்கின. சில சாதியில் தனிப்பட்ட நாவிதர் இருந்தார். அவர் குடிமகன் என்று அழைக்கப்பட்டார். அவரும் எல்லோரையும் அப்பா என்றே அழைப்பார். இறப்பு வீடுகளில் நடைபெறும் சடங்குகளில் குடிமகன்கள்தான் எல்லாச் சடங்குகளையும் முன்னின்று செய்தனர்.

நாவிதர் வீட்டுப் பெண்கள்தான் கிராமத்தில் எல்லா சாதிப் பெண்களுக்கும் ‘பிரசவம்’ பார்த்தனர். இன்று மகளிரியல் மருத்துவரான பெண் டாக்டர் செய்யும் வேலையை, பரம்பரை அறிவின் துணையுடன் நாவிதர் சாதிப் பெண்கள் சிறப்பாகச் செய்தனர்.

பியூட்டி பார்லர், மகப்பேறு மருத்துவர் எனச் சமூகத்தில் கௌரவமாகக் கருதப்படும் தொழில்களைச் செய்த மருத்துவர் குலத்தினராகத் தங்களைக் கூறிக்கொள்ளும் நாவிதர்களின் மதிப்பு இன்றைய கால கட்டத்திலும் தாழ்வாகவே உள்ளது வருத்தமான விஷயம்.

ஏகாளி என்று அழைக்கப்படும் அழுக்குத் துணிகளை வெளுத்து சலவை செய்து தரும் சலவைத்தொழிலாளர்களும் கிராமத்தின் அங்கமாக வாழ்ந்து வந்தனர். பிறப்பு, இறப்பு என எல்லாச் சடங்குகளிலும் சலவையாளர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். பெரும்பாலான ஏகாளிகள் வருஷக் கூலிக்குத் தான் வீடுகளில் வேலை செய்தனர். சிலர் உருப்படிக்கு இவ்வளவு என்ற கணக்கில் சலவைத்துணிக்குக் காசு வாங்கினர். வீடு வீடாகப் போய் எடுத்துவரும் அழுக்குத் துணி மூட்டைகளைக் கழுதைமேல் ஏற்றிக் கொண்டு ஆற்றங்கரைக்குப் போவார்கள். பெரும்பாலும் ஆண்பெண் அடங்கலாகக் குடும்பத்தினர் எல்லாரும் வண்ணான் துறையில் உழைப்பார்கள். உவர் மண்ணைப் பெரிய மண் தாழிகளில் உரைத்து, அதில் அழுக்குத்துணிகளை முக்கி எடுப்பார்கள். நீரால் நிரம்பிய வெள்ளாவிப் பானைகளின் மீது துணியை அடுக்கி வைத்து, பானைக்குக் கீழே நெருப்பை மூட்டி, நீரைக் கொதிக்க வைப்பார்கள். பானையிலிருந்து கிளம்பும் நீராவி அழுக்குத் துணிகளின் வழியே நுழைந்து வெளியே வரும். அப்புறம் ஆற்று நீரில் துணிகளை அலசி, கருங்கல்லில் ‘ஹோ. . .ஹோ’ என சப்தத்துடன் தோய்த்துக் காய வைத்து வீட்டுக்குக் கொண்டு வருவார்கள். பெரும்பாலான சலவையாளர்கள் கல்வி அறிவற்றவர்கள், எனினும் துணிகளை அடையாளம் காண்பதற்காக அழியாத மையினால் குறிகளைப் போடுவார்கள். ஒவ்வொரு வீட்டிற்குமெனத் தனிப்பட்ட குறி இருந்தது. சேப்பங்கொட்டை மை அல்லது கடையில் விற்கப்படும் மையை சிறிய குச்சியினால் தொட்டு, துணியின் நுனியில் குறியிடுவார்கள். எங்கள் வீட்டிற்குப் பல்லாண்டுகளாகத் துணி வெளுத்த சன்னாசி என்பவர் . . என்று குறியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வருஷக்கூலி பேசும் வெளுக்கும் சலவைத் தொழிலாளர்கள், அந்தக் கூலியை ஆதிக்க சாதியினரிடமிருந்து பெறுவதற்காக, அவர்கள் வீட்டிற்குப் பல தடவைகள் நடந்து கஷ்டப்பட வேண்டும்.

கிராமத்தில் நிலத்தைச் சார்ந்து வாழ்ந்த தலித்துகளுடைய வீட்டுத்துணிகளைத் துவைத்துத் தருவதற்காகப் ‘புதர வண்ணான்’ என்ற சாதியினரும் எங்கள் ஊரில் இருந்தனர். சமூக சாதிய அடுக்கில் அவர்களை மனித உயிராகக்கூடக் கருதாத கேவலமான சூழல் அன்று நிலவியது.

தட்டான் எனப்படும் பொற்கொல்லரும் கிராமங்களில் இருந்தனர். அவர்கள் தங்க ஆசாரி என்று அறியப்பட்டனர். பெரிய மண் பானையைக் கவிழ்த்தது போன்ற சட்டி அமைப்பில் உமியைக் கொட்டி, நடுவில் கரியினால் கங்கு மூட்டி, அதில் எதையாவது வைத்து ஊதிக் கொண்டிருப்பார்கள். தங்கத்தை எடைபோட கறுப்பும் சிவப்புமான குன்றிமணி விதையைப் பயன்படுத்துவார்கள். குடியானவ வீட்டுப் பெண்கள் தோடு, மூக்குத்தி அணிந்திருந்தாலே பெரிய காரியம். மேல் சாதியினர், வியாபாரிகள் வீட்டில்தான் தங்க ஆபரணங்கள் புழங்கின. வெள்ளிக் கொலுசினைக் காலில் அணிவது அப்பொழுது வழக்கமில்லை. விதம்விதமான மாடல்களில் ஜொலிக்கும் தங்க நகைகள் கிராமப்புறங்களில் மோஸ்தரில்லை. எனவே தேவைக்குத்தக்கபடி தங்க நகைகள் தயாரித்துக் கொடுத்த ஆசாரிகள் ஓரளவு வசதியுடன் வசித்துவந்தனர். குழந்தைகளுக்குக் காது குத்துதல், பெண்களுக்கு மூக்கு குத்துதல் கிராமப்புறங்களில் மும்முரமாக நடைபெற்றன. அதற்கு தட்டார் தேவைப்பட்டார்.

அறுபதுகளில்கூட உடம்பில் பச்சை குத்திக் கொள்வது என்பது கிராமங்களில் வழக்கிலிருந்தது. குறவர் சாதியைச் சார்ந்தவர்கள் பன்றிகளை வளர்த்துக் கொண்டு கிராமங்களில் வசித்தனர். அவர்கள் வீட்டுப் பெண்கள், கிராமத்தில் யாருக்காவது பச்சை குத்தவேண்டுமெனில் வீட்டிற்கே வந்து பச்சை குத்திவிட்டனர். பச்சை மையில் கலக்கப்படுவது தாய்ப்பால் என்று பேசிக்கொள்வார்கள். வீடுகளில் தானியங்களைச் சுமந்து செல்லப் பெரிதும் பனை நார்களினால் பின்னப்பட்ட பெரிய பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. அவை ‘கடகம்’ எனப்பட்டன. தானியத்தைப் புடைக்கப் பயன்படும் ‘சுலகு’ பனை நாரினால் செய்யப்பட்டிருக்கும். இத்தகைய பொருட்கள் பயன்பாட்டின் காரணமாக அடிக்கடி பிய்ந்துபோகும். அப்பொழுது அவற்றைப் பனைநாரினால் வலுப்படுத்தி சீராக்கிடும் பணியைக் குறவ வீட்டுப் பெண்கள் அருமையாகச் செய்தனர். ஆனால் அவர்களுக்குக் கூலி தருவதற்கு பெரிய வீட்டுப் பெண்கள் கடுமையாகப் பேரம் பேசினார்கள்.

சமையலுக்குத் தேவைப்படும் எண்ணெய், மாட்டுக்குத் தேவைப்படும் புண்ணாக்கு ஆகியனவற்றை மரச் செக்கில் ஆட்டித் தரும் பணியைச் செக்கார் எனப்படும் வாணியச் செட்டியார்கள் செய்தனர். மரச் செக்கில் கட்டப் பெற்றுள்ள காளை மாடுகள் அவற்றை இழுத்துக் கொண்டு நாள் முழுக்கச் சுற்றிவரும். செக்கில் இடப்பட்ட எள், மர உலக்கையினால் நசுக்கப்பட்டு எண்ணெய் வெளியேறும். செக்குத் தொழில்மூலம் கிடைக்கும் எண்ணெய் விற்பனை முழுக்கக் கிராமத்தைச் சார்ந்தே இருந்தது.

தையற்காரர் பெரும்பாலும் வீட்டுத் திண்ணையில் தையல் இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்தார். சிறிய துணிக்கடையின் முன்னால் உள்ள கீற்றுக் கொட்டகையில் குறைந்த பட்சம் இரு தையற்காரர்களாவது இருந்தனர். யார் வந்து துணி கொடுத்தாலும் ‘ம். . . உடனே தந்திடுவோம்’ என்று வாங்குகிறவர், ஒவ்வொருவரையும் ஏழெட்டுத் தடவைகள் இழுத்தடித்துவிடுவார். அதிலும் பொங்கல், தீபாவளி நேரம் சாக்குப்போக்கு சொல்லுவதில் அவர் வல்லுநர் ஆகிவிடுவார். துணியைத் தந்தவர் சட்டைதைத்து விட்டாரா என்பதைக் கேட்க வருவதைத் தொலைவில் இருந்தே பார்த்துவிடும் தையற்காரர், அவருடைய துணியை எடுத்து மிஷினில் வைத்துத் தைப்பதைப்போலப் பாவனை செய்வார். ‘உங்க வேலைதான். காலையில் தந்திடுவேன்’ என்பார். அவர் அங்கிருந்து போனவுடன், அந்தத் துணி மரப்பெட்டிக்குள் போய்விடும். வேறு துணியை எடுத்து வைத்துத் தைக்கத் தொடங்குவார். தையற்காரரின் விருப்பப்படிதான் உடைகள் தயாராகும். அவை தொள தொளவென்று அல்லது இறுக்கமாக இருக்கலாம். பொருத்தமான ஆடை என்பது அதிர்ஷ்டம் சம்பந்தப்பட்டது.

எழுபதுகளில் கிராமப்புறங்களில் ஏற்பட்ட மாற்றங்களில் முக்கியமானவை சலூன், லாண்டரி, டெய்லர்ஸ் ஆகியன ஏற்படுத்தப்பட்டதுதான்.

நாற்காலியில் ஆளை உட்காரவைத்து, உடம்பைச் சுற்றி வெள்ளைத் துணியினால் மூடி, சானை பிடிக்கப்பட்ட கத்தரிக்கோலினால் முடிவெட்டும் சலூன்களில் முன்னும் பின்னும் வைக்கப்பட்டிருந்த பெரிய நிலைக் கண்ணாடிகள் சமத்துவத்தைக் கொண்டு வந்தன. வீடுகளுக்குப் போய், காத்திருந்து முடிவெட்டிக் கொண்டிருந்த நாவிதர், சலூனை விட்டு எங்கும் நகரவில்லை. ‘பார்பர்’ என்று கௌரவமாக அழைக்கப்பட்டார். சலூன் கடைச் சுவர்களில் கவர்ச்சிகரமாகத் தொங்கிய நடிகைகளின் வண்ணப்படங்கள், சபலமான ஆண்களுக்குக் கிளுகிளுப்பை ஏற்படுத்தின. கீற்றுக் கொட்டகையில் முடியை வெட்டிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தால் ‘தீட்டு’ என ஒதுக்கப்பட்ட நிலைமை மாறியது. சலூன்களில் முகச்சவரம் செய்துகொண்டு, ஸ்நோ தடவி, பவுடர் பூசிக்கொண்டு விஷேசங்களுக்குக் கிளம்பும் மைனர்கள் உருவானது புதிய அத்தியாயம் தொடங்குவதற்கு வழிவகுத்தது.

அழுக்குத் துணி மூட்டைகள், கழுதை என்று மல்லாடிக் கொண்டிருந்த சலவைத் தொழிலாளர்களில் இளைஞர்கள் சிலர் ‘லாண்டரிக் கடை’ எனப் புதிதாகக் கிராமத்தில் தொடங்கினர். ‘அர்ஜெண்ட்-3; ஆர்டனரி 7 நாட்கள் எனத் தொங்கவிடப்பட்ட பலகையை எழுத்துக் கூட்டி வாசித்த கிராமத்தினருக்கு விநோதமாக இருந்தது. சட்டையை உடன் தேய்த்துத் தரவேண்டுமெனில், அதற்கெனக் கேட்கப்பட்ட கட்டணம் குறித்து மனதுக்குள் அதிருப்தி இருப்பினும், முணுமுணுப்பு இல்லாமல் பணத்தைக் கொடுத்துவிட்டுப் போயினர். எங்கள் ஊரில் லாண்டரிக்கடை வைத்திருந்த அய்யாக்காளை மிகச் சவடலாகப் பேசியவாறு, துணிகளைக் கங்குப் பெட்டியினால் அயர்ன் செய்து கொண்டிருந்தார். வருஷம் முழுவதும் துணியைத்தோய்த்துத் தந்துவிட்டு, ஏச்சினையும் திட்டினையும் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் பொருளாதார ரீதியில் விடுதலைபெற லாண்டரிகள் வழிவகுத்தன.

அறுபதுகளின் நடுப்பகுதியிலே எங்கள் ஊரில் ‘டெய்லர்ஸ்’ எனப்படும் தையற்கடைகள் தொடங்கப்பட்டுவிட்டன. மூன்று அல்லது நான்கு தையல் இயந்திரங்கள் இயங்கிட, கடை முதலாளி, பெரிய மேசையின் முன்னர் நின்று துணிகளை ஸ்டைலாக வெட்டிக் கொண்டிருந்தனர். அவருடைய கழுத்தில் பெரிய ‘அளவு நாடா’ தொங்கிக் கொண்டிருக்கும். பெரும்பாலான டெய்லர்கள் தி.மு.க. அல்லது கம்யூனிஸ்ட் கட்சி அனுதாபிகளாக இருந்தனர். அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளுக்குச் சார்பான பத்திரிகைகள் கடைகளுக்கு வந்தன. டெய்லரிங் கடையிலும் சலூன்களிலும் தினமும் வந்த தினத்தந்தி அல்லது கட்சிப் பத்திரிகைகள் படிக்க வாடிக்கையாளர் கூட்டம் போகும். டெய்லர்கள் ஓரளவு அரசியலறிவு பெற்றிருந்தனர். எனவே ஆரவாரமில்லாமல் கடைக்கு வருகிறவர்களிடம் அரசியல் விவாதங்களில் ஈடுபட்டனர். எங்கள் ஊரில் நாஞ்சில் நாதன் என்பவர் ‘திராவிடநாடு தையலகம்’ என்ற கடையை நடத்தி வந்தார். தொடக்கப்பள்ளிக்கூட மாணவனான என்னிடம்கூட அறிஞர் அண்ணாவின் பெருமைகளைச் சொல்லியிருக்கிறார்.

எழுபதுகளில் சிதையத் தொடங்கிய கைவினைஞர்களின் வாழ்க்கை, பிற்காலத்தில் இன்னும் மோசமானது. எல்லாவற்றுக்கும் கணக்குப்பார்க்கும் நிலைமையும் விவசாயம் கட்டுப்படி ஆகாத நிலையும், குடியானவர்களைச் சிக்கலுக்குள்ளாக்கியது. எனவே பழைய முறைகளும் பழக்க வழக்கங்களும் மாற்றத்திற்குள்ளாயின. நவீன வாழ்க்கைக்குப் பொருந்திப் போக இயலாத கைவினைஞர்கள், புதிய பிரச்சினைகளை எதிர் கொண்டனர். வேறு தொழில்களோ, கல்வியறிவோ இல்லாதவர்கள் பாடு இன்னும் கஷ்டமானது.
தமிழீழம் அது தனியீழம்

தற்போதைய இந்திய நாட்டிற்கு தெற்கே ஏழ்தெங்க நாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு,ஏழ்குணகரை நாடு, ஈழ நாடு, ஏழ் குறும்பனை நாடு, குமரிக்கொல்லம் போன்று இருந்த நாற்பத்தொன்பது தமிழ் நாடுகளில் கடல் கோள்களால் மூழ்கியவை போக எஞ்சியிருப்பது, தமிழர் என்ற ஆதிகுடிகள் வாழ்ந்த ஈழ நாடு.

ஈழத்தில் வாழும் தமிழர்கள் குடியேறிகள் அல்ல! மண்ணின் மைந்தர்கள்! தோட்டத் தொழிலாளர்களைத் தவிர
இலங்கை என்று சொல்லப்படும் ஈழ நாடு முழுவதுமே தமிழர்கள் நாடு. இலங்கையை ஆண்ட இராவணன் தமிழனே.

கி.மு 3 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வடபகுதியில் வாழ்ந்த விசயன் என்ற ஆரிய மன்னன் இலங்கை சென்று நிறுவித்த வம்சமே சிங்கள இனம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இலங்கை வரலாறான மகாவம்சமும் அதைத்தான் கூறுகிறது.

இந்தியாவைச் சேர்ந்த இராமனால் தமிழர் அரசன் இராவணனுக்கு இன்னல்!
இந்தியாவைச் சேர்ந்த விசயன் தோற்றுவித்த சிங்களவம்சத்தால் தமிழருக்கு இன்னல்!
கி.பி 1987ல் இந்தியா அனுப்பிய அமைதிப்படையால் தமிழருக்கு இன்னல்!
விசயனால் உருவாகிய சிங்களவ அரசும், மண்ணின் மைந்தர்களாகிய தமிழரின் அரசும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டது வரலாறு.

ஒன்றல்ல இரண்டல்ல! ஈராயிரம் ஆண்டுக்கும் மேலாக சிங்களர் தமிழர் போர்கள் நிகழ்ந்துள்ளன.
ஈழத்தமிழருக்கு ஆபத்தென்ற போதெல்லாம், ஈழ நாட்டில் தமிழ் ஆட்சிக்கு ஆபத்து வந்த போதெல்லாம்
தமிழ் நாட்டை ஆண்ட பாண்டிய பல்லவ சோழ அரசர்கள் படை நடத்தி சிங்களர்களை அடக்கி ஆண்டிருக்கிறார்கள் என்பதுவும் வரலாறு.

கரிகாலன், இராசராசன், குலோத்துங்கன், பாண்டியர்கள், காஞ்சிப்பல்லவர்கள் என்று அனைத்து தமிழருமே ஈழத்தில் தமிழருக்கு இடுக்கண் வந்தபோதெல்லாம் சிங்களரை ஒடுக்கி வைக்க கடல் கடந்து சென்றுள்ளார்கள்.
ஈழத்தில் பஞ்சம் வந்தகாலத்தில் தமிழகத்தைச் சார்ந்த சடையப்ப வள்ளல் என்பார் கப்பல்களில் உணவுப்பண்டங்களை அனுப்பி வைத்தார் என்று வரலாறு சொல்கிறது.

சிங்களர்கள் தமிழர்கள் மேல் கொண்டுள்ள இனவெறி ஏதோ பிரபாகரன் காலத்தது அல்ல. பல நூறாண்டுகள் சேர்ந்ததை ஈராயிரம் ஆண்டுகள் பழையது.

சிங்களர்கள் தமிழரை சூறையாடுவது 10, 20 ஆண்டு நிகழ்ச்சி அல்ல; பல நூறாண்டு இன வெறி!
சிங்களரை அடக்கிய கரிகாலன் போர்க் கைதிகளை தமிழகத்துக்கு கொண்டு வந்து காவிரியின் இரு மருங்கும் கரையெடுத்ததுவும் கல்லணை கட்டியதும் வரலாறு!

தீராப்பகையை கொண்டுள்ள சிங்களர்கள் தொடர்ந்து தமிழருக்கு இன்னல் விளைவித்தே வந்திருக்கிறார்கள்!
கி.பி 17 ஆம் நூற்றாண்டில் ஈழத்தமிழ் அரசின் மன்னனான சங்கிலி என்பவனை போர்த்துகீசியர் கொன்ற பின்னர் இதுவரை தமிழர் ஆட்சி நடந்ததில்லை ஈழத்தில்.

1947ல் ஆங்கிலேயர்கள் இலங்கைக்கு விடுதலை அளித்து சென்றதில் இருந்து தமிழ், சிங்கள பகுதிகள் இணைந்த இலங்கையில் சிங்களர் ஆட்சியே நடைபெற்று வருகிறது.
ஆனால் சிறுபான்மையினரான தமிழரை சிங்கள அரசு இரண்டாம் குடிகளாகவே நடத்திவருகிறது.
இன்று எக்காளமிட்டு தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசுகளின் சட்டப்படி, ஒருங்கிணைந்த இலங்கையில் ஒரு தமிழன் நாட்டின் அதிபராக வர முடியாது! ஏனென்றால் சட்டத்தில் இடமில்லை!
ஏனென்றால் சிங்களருக்கு மனமில்லை!

இன்று சந்திரிகா அம்மையார் யாழ்ப்பாணத்திற்கு வேண்டுமானால் பிரபாகரன் முதல் அமைச்சராக இருக்கட்டும் என்று சொல்கிறார்! நகைச்சுவையாய்த் தெரிகிறது! வேண்டுமானால் இலங்கையின் அதிபராக இருக்கட்டும் என்று சொல்லட்டுமே!
பிரபாகரன் வேண்டாம்! வேறு எந்த தமிழரையாவது ஆக்கட்டுமே ? முடியாது! காரணம் சட்டத்தில் இடமில்லை! அதை மாற்றவும் முடியாது!
பயிர்செய்து, அறம் செய்து, தொழில் செய்து இலங்கையை ஆக்கிவைத்த தமிழருக்கு சம உரிமை சட்டப்படி மறுக்கப் பட்டது.

பள்ளிகளில், வேலைகளில் தமிழர்கள் இரண்டாம் நிலையில்தான் இருக்க முடியும், சட்டப்படி!
காவல்துறையில், இராணுவத்தில் தமிழர் கிடையாது! அதுவும் சட்டப்படி!
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது கூட இந்திய இராணுவத்தில், உயர்பதவிகளில் இந்தியர்கள் இருந்தனர்! "சர்" என்று பட்டமெல்லாம் பெற்றனர்!
ஆனால் இலங்கையில் மக்கள் தொகையில் 20-30 விழுக்காட்டிற்கும் மேலான தமிழர்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டது!

செல்வச் செழுமையுடன் வாழ்ந்த தமிழர் மேல் சிங்களர் ஆத்திரம் கொண்டு அவர்கள் இல்லத்தை, அவர்கள் பெண்டுகளை, அவர்கள் சொத்துக்களை சூறையாடுவது நாளாவட்டத்தில் சிங்களரின் பொழுது போக்காகிவிட்டது!
எத்தனை பெண்கள் மானமிழந்தனர்! எத்தனை ஆண்கள் மாண்டு மடிந்தனர்! எத்தனை தமிழர்கள் நாட்டை விட்டே வெளியேறினர்! கணக்கிலடங்கா!

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் திசைகளே அதற்கு சான்று!
சூறையாடல் நிகழ்ச்சிகளின் போது கொதிக்கும் தார்ச்சட்டிகளில் போட்டு தமிழ்க் குழந்தைகளைக் கொன்ற கொடூரம் ஆயிரமாண்டு காழ்ப்புணர்ச்சியின் உச்சம்!
தமிழ்பெண்களைக் கற்பழித்துவிட்டு அவர்களின் அல்குல்லில் குண்டு வைத்து வெடித்த கொடூரம் ஒன்றல்ல இரண்டல்ல!
சிங்கள இராணுவமும், சிங்களக் குண்டர்களும் சூறையாடி முடித்துவிட்டு "இங்கே தமிழர் கறியும் எலும்பும் இலவசமாக கிடைக்கும்" என்று எழுதிப் போட்டு தமிழர் தசையை கடை வைத்த கொடுமை உலகில் வேறெங்காவது நடந்திருக்கிறதா ?
எழுதவே கைகள் நடுங்கும் செய்தியிது! இந்த அளவிற்கு தீராப் பகை கொண்ட சிங்களவருடன் தமிழர் இணைந்து வாழ முடியுமா ?
ஈராயிரம் ஆண்டுப் பகையுடன் சமாதானம் செய்து கொள்ள இயலுமா ?

1940,50,60 களில் சிங்கள அரசுடன் சனநாயக முறையில் சம உரிமைக்காக குரலிட்டு அது நடக்கவே நடக்காது என்ற எண்ணம் தோன்றவே, தமிழ் மக்களிடம் சனநாயக முறையில் "தனிநாடு தேவையா இல்லையா ?" என்று வாக்கெடுப்பு நடத்தி கிட்டத்தட்ட 90 விழுக்காட்டு ஈழத் தமிழ் மக்களின் ஆதரவை பெற்ற பின்னரே தமிழருக்கு தனி ஈழம் தேவை என்று, அதையும் அமைதிப் போராட்டங்களினால் பெற முன்வந்தனர் தமிழர்கள்.
ஆயினும் தொடர்ந்து நடந்த சிங்கள அட்டூழியங்களில் இருந்து காத்துக் கொள்ள தமிழரும் ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயம் ஏற்படவே பல ஆயுதம் தாங்கிய குழுக்கள் தோன்றி தமிழ் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டன. அவைகளே விடுதலைப் போர்களையும் முன்னின்று நடத்தி வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு செயல்படுத்து வந்தன! வருகின்றனர்!

தமிழருடன் சிங்களவர் கொண்டுள்ள பகையுணர்வு கடுமையாக இருக்க, தமிழர்களால் அவர்களுடன் இணைய முடியாமல் இருக்க, இந்தியாவில் வாழ்பவர்களில் ஒரு சிலரோ, தங்களின் காலகாலமான தமிழ் எதிர்ப்பின் ஒரு பகுதியாக, "இந்திய ஒருமைப்பாடு" என்ற போர்வையில் இந்தியாவிலிருந்து சென்று உருவாக்கி வளர்க்கப்பட்ட சிங்களருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்!

இன்று தனி ஈழம் அமைந்தால் நாளை அது தனித் தமிழ்நாடு கோரிக்கையாக உருவாகும்; அது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து என்பதே இவர்கள் கூறுவது!
ஆனால் "தமிழ் ஈழம்" தேவை என்பதின் அடிப்படையும் தனித்தமிழ்நாடு கோரிக்கை வந்தால் அதன் அடிப்படையும் ஒன்றாக இருக்கும் என்று கருதுவது பைத்தியக்காரத்தனம்! வடிகட்டிய முட்டாள்தனம்!
ஈழத்திலே தமிழர் ஒருவர் நாட்டின் அதிபராக வர முடியாது! ஆனால் இந்தியாவிலே அது நடக்கும்!
ஈழத்திலே சிறுபான்மையினரான தமிழர், அதிபராக வர இயலாது! ஆனால் இந்தியாவிலே சிறுபான்மையினர் வரமுடியும்; வந்திருக்கிறார்கள்! இசுலாமியர் அதிபராக இருந்திருக்கிறார்!

இந்தியாவிலே, குமரி முதல் இமயம் வரை அனைத்து குடிமகனுக்கும் சட்டம் ஒன்று! உரிமைகள் ஒன்று! அனைவரும் இந்தியரே! ஆனால் இலங்கையில் நிலை அதுவல்ல!
இரண்டே இனங்கள் உள்ள நாடு இலங்கை! பல மொழி, இன, கலைகள் கொண்ட நாடு இந்தியா.
தமிழர்கள் கர்நாடகாவில் கொல்லப்பட்டால் அதை வங்காளிகளோ அல்லது மராட்டியரோ வாழ்த்த முடியாது! வாழ்த்த மாட்டார்கள்!

ஒரிசாவின் வெள்ளத்துக்கும், குசராத்தின் பஞ்சத்துக்கும் இந்தியாவின் எல்லா மாநிலங்களும் பங்களிக்கின்றன.
பாகித்தான், சீனப் போர்களில் மட்டுமல்ல நேதா'சி அவர்களின் இந்தியப்படைகளிலும் இடம் பெற்றவர்கள் தமிழர்கள். நேதா'சி அவர்களின் இந்திய தேசியப் படையில் பங்கு கொண்ட மறவர்கள் எத்தனையோ பேர்! அப்படையின் தளபதியாக இருந்தவர் தமிழ்ப் பெண்மணி!
இந்தியாவின் எந்த இடத்திலும் வேலைசெய்ய மற்றும் உயர்பதவி வகிக்க தமிழர்களுக்கு உரிமை உண்டு!
இன்று கேரள, கர்நாடக, ஆந்திர அரசுகளிடம் தமிழகம் கையேந்தி நிற்கலாம்! வருத்தமான விடயம்தான்! ஆயினும் தமிழர்கள் தங்கள் சரியான மதியுடன் இயங்கினால் சிக்கல் தீர்வதற்கு வாய்ப்பிருக்கிறது.
தமிழர்களைக் கொல்வோம்! தமிழ்ப் பெண்களைக் கற்பழிப்போம்! தமிழர்களுக்கு மட்டும் இரண்டாம் குடியுரிமை என்ற நிலை இந்தியாவில் இல்லை!

ஆனால் ஈழத்தில் உண்டு! சட்டப்படியும் உணர்வுப்படியும் உண்டு!

15 மொழிகளை ஆட்சி மொழியாக்கல், நதிகளை இணைத்தல், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் போன்ற பல்வேறு ஒருமைப்பாட்டு செயல்களுக்கு இந்தியாவில் வாய்ப்பிருக்கிறது!

ஆகவே தனி ஈழத்தையும், இந்திய ஒருமைப்பாட்டையும் ஒப்பிடுபவர்கள் சுயநலக்காரர்கள்; அல்லது அறிவிலிகள்!
தனி ஈழம் என்பது வேதனையிலிருந்தும் சோதனையிலிருந்தும் தமிழர் வெளியேற அமைய வேண்டியது! ஆதலின்தான் "தமிழ் ஈழம் அது தனி ஈழம்" என்ற கொள்கை நோக்கித் தமிழர்கள் ஓயாதுழைத்து வருகிறார்கள்.
ஒரு சில ஆண்டுகள் ஒவ்வாமை இருந்ததால் உருசிய நாடு 15 நாடுகளாகப் பிரிந்து கொண்ட போது, ஈராயிரம் ஆண்டாக சிங்களரின் பகைக்கு ஆளாகியுள்ள தமிழினம் தனியாகப் போவது நியாயமல்லவா ?
அதன் குறுக்கே நிற்பவர் யாராக இருந்தாலும், அது மனிதாபிமானமற்ற செயல் அல்லவா ?